"ரூ.200 கோடி" சொத்தை தானம் கொடுத்துவிட்டு.. துறவியான குஜராத் தம்பதி! இனி யாசகம் கேட்டு தான் வாழணும்
சூரத்: குஜராத்தைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வர தம்பதி தங்களின் ரூ.200 கோடி சொத்தை பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்துவிட்டு துறவறத்தை ஏற்றுள்ளனர். மேலும், அவர்கள் விரைவில் ஆன்மீக பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இங்கு யாரை அழைத்துக் கேட்டாலும் அவர்களுக்கு எப்படியாவது பணக்காரனாக மாற வேண்டும் என்பதே ஆசையாக இருக்கும். ஆனால், இங்கே ஒரு தம்பதி தங்களின் பல கோடி சொத்தை நன்கொடை அளித்துவிட்டு துறவு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.

ஜெயின் தொழிலதிபர்கள்: குஜராத்தைச் சேர்ந்த ஜெயின் தொழிலதிபர்கள் பவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி தான் இப்படிச் செய்துள்ளனர். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் அனைத்து செல்வங்களையும் மக்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த மாதம் நடக்கும் மத நிகழ்வில் அவர்கள் முழுமையாகத் துறவு வாழ்க்கைக்குச் செல்கிறார்கள்.
ஹிம்மத்நகரைச் சேர்ந்த இந்த பவேஷ் பண்டாரி கட்டுமான தொழிலில் ஈடுபட்டு இருந்தார். கடந்த 2022ஆம் ஆண்டில் அவரது 19 வயது மகள் மற்றும் 16 வயது மகன் இருவரும் இதேபோல துறவு வாழ்க்கை திரும்பினர். அவர்களைப் பின்பற்றி இப்போது பவேஷ் பண்டாரி தனது மனைவியுடன் செல்வத்தைத் தானமாக அளித்துவிட்டு துறவு வாழ்க்கை செல்கிறார். துறவு வாழ்க்கைக்குச் சென்ற தங்கள் பிள்ளைகளைப் பார்த்தே அவர்கள் இதைச் செய்துள்ளனர். செல்வம் மீதான ஆசைகளைத் துறந்து ஆன்மீக பாதைக்குச் செல்லவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
என்ன செய்யணும்: இதற்காக அவர்கள் ஏப்ரல் 22ஆம் தேதி உறுதிமொழி ஒன்றை ஏற்க உள்ளனர். அதன் பிறகு இந்த தம்பதியினர் அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.. அதாவது குடும்பம் உறவு என யாரையும் கருதக்கூடாது. ஒட்டுமொத்த உலகத்தையும் இவர்கள் குடும்பமாகக் கருத வேண்டும். மேலும், எந்த பொருளையும் இவர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே விதியாகும்.
மேலும், இத்தனை காலம் சொகுசு கார்களில் பயணித்து வந்த அவர்கள், இனிமேல் நாடு முழுக்க வெறுங்காலுடன் தான் நடந்து செல்ல வேண்டும். இத்தை ஆண்டுகள் கோடிகளில் புரண்ட இவர்கள் இனி யாசகம் கேட்டு மட்டுமே வாழ வேண்டும். ஜைன துறவிகள் இரண்டை வெள்ளை நிற ஆடைகள் மற்றும் யாசகம் கேட்க ஒரு கிண்ணத்தை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.
அகிம்சை பாதை: உட்காரும் போது பூச்சிகளைக் கொன்றுவிடாமல் இருக்கத் துடைப்பத்தை வைத்து அந்த இடத்தில் இருக்கும் பூச்சிகளை அப்புறப்படுத்திய பிறகே அமர வேண்டும். சிறு உயிரினங்களுக்குக் கூட தீங்கு இழைக்காத அகிம்சைப் பாதை தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்பதற்கு இது அடையாளமாகும்.
குஜராத்தின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருந்த பண்டாரி குடும்பத்தின் இந்த திடீர் முடிவு அம்மாநிலத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. துறவு வாழ்க்கை தேர்ந்தெடுக்கும் முன்பு பண்டாரி தம்பதிகள், 35 பேருடன் சேர்ந்து நான்கு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது அவர்கள் அனைத்து செல்வங்களையும் நன்கொடையாக அளித்தனர். மொபைல் தொடங்கி விலையுயர்ந்த அனைத்து பொருட்களையும் இவர்கள் பொதுமக்களுக்கு நன்கொடையாக அளித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
முதல்முறை இல்லை: ஜெயின மதத்தில், 'தீக்ஷா' எடுப்பது என்பது ஒரு மிக முக்கியமான அர்ப்பணிப்பாகும்.. தனிநபர் எந்தவொரு பொருளையும் தனக்குச் சொந்தமாக வைத்துக் கொள்ளாமல் யாசகம் பெற்று மட்டுமே வாழ வேண்டும் என்பது இதன் விதி. மேலும், நாடு முழுவதும் அவர்கள் வெறுங்காலுடன் சுற்ற வேண்டும். அதேநேரம் பெரும் கோடீஸ்வரர்கள் இதுபோல தங்கள் செல்வத்தை தானம் கொடுத்துவிட்டு துறவு வாழ்க்கைக்குத் திரும்புவது இது முதல்முறை இல்லை.
சமீபத்தில் பவரலால் ஜெயின் போன்ற என்ற கோடீஸ்வரர், இதேபோலத் தான் தனது செல்வத்தை நன்கொடையாகக் கொடுத்துவிட்டு சாதாரணமாக உணவகம் ஒன்றைத் தொடங்கினார். அதேபோல கடந்த ஆண்டு, குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி மற்றும் அவரது மனைவி இதேபோல துறவு வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்களின் 12 வயது மகன் துறவறத்தை ஏற்றுக்கொண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் மகனைப் போலவே இந்த தம்பதியும் துறவு வாழ்க்கைக்குச் சென்றனர்.
மபி தொழிலதிபர்: கடந்த 2017ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பணக்கார தம்பதி தங்களின் ரூ.100 கோடி சொத்தை தானமாக அளித்துவிட்டு, தங்கள் மூன்று வயது மகளையும் விட்டுவிட்டு துறவிகளாக மாறியது குறிப்பிடத்தக்கது. சுமித் ரத்தோர் (35) மற்றும் அவரது மனைவி அனாமிகா (34) தங்கள் மகளைத் தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டு துறவிகளாக மாறினர்.












Click it and Unblock the Notifications