சூடான சமையல் சாதம்.. காய்கறிகளும் பிரமாதம்.. இதுவே காங்கிரஸுக்குப் போதும்!
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் பெங்களூரு பிடதியில் உள்ள ஈகல்டன் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளியாகி வருகின்றன.
பெங்களூரு: குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தற்போது பெங்களூருவில் பிடதியில் உள்ள ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கே அவர்களுக்கு ராஜ உபசாரம் நடைபெறுகிறது.
குஜராத் அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரணம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பலரும் ஆளும் பாஜகவிற்கு தாவி வருவதுதான்.
குதிரைபேரம் மூலம் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 எம்எல்ஏக்களை ரகசியமாக அழைத்து வந்து பெங்களூருவில் உள்ள பிடதியில் உள்ள ஈகல்டன் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் வரை எம்எல்ஏக்களுக்கு ரிசார்டில் ராஜ உபசாரம் நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.

சொகுசு ரிசார்ட்ஸ்
குஜராத்தில் இருந்து இரவோடு இரவாக விமான நிலையம் அழைத்து வரப்பட்ட எம்எல்ஏக்கள் உற்சாகமாகவே காணப்பட்டனர். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்து மூலம் நேராக ராம்நகர் மாவட்டம் பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு ரிசார்ட்ஸ்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.

குஜால் செல்ஃபி
ஈகல்டன் ரிசார்டில் சொகுசு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் நீச்சல் குளங்களில் உற்சாகமாக நீந்தி களைப்பை போக்கிக்கொண்டனர். பின்னர் ஆங்காங்கே செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

ஸ்பா, கோல்ப் விளையாட்டு
இலவச ஸ்பா சென்று தங்களை ரிலாக்ஸ் செய்து கொண்ட எம்எல்ஏக்கள் உற்சாகமாக கோல்ப் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்த காட்சிகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன.

பஃபே உணவுகள்
எம்எல்ஏக்கள் வகை வகையாக சைவம், அசைவ உணவுகள் சாப்பிடும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இனிப்புகள், பழங்கள், சாலட்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. வகை வகையாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள உணவுகளை எம்எல்ஏக்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் கண்டனம்
ராம்நகர் மாவட்டம் பிடதி அருகே ஈகல்டன் சொகுசு ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதை சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காரணம் குஜராத்தில் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இங்கே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதா என்று கேட்டுள்ளனர்.

கோல்டனை முந்துமா ஈகல்டன்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் திடீர் அரசியல் மாற்றம் ஏற்பட்ட போது சசிகலா அணியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் 122 பேர் கூவத்தூர் கோல்டன் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். ராஜ உபசாரம் நடைபெற்றது. அதேபோல பிடதியில் உள்ள ஈகல்டன் தங்க வைக்கப்பட்டுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் ராஜ உபசாரம் நடைபெறுகிறது. இன்னும் என்னென்ன நடக்குமோ பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications