குஜராத்தில் வெள்ளத்திற்கு 126 பேர் பலி...55,000 பேர் மீட்பு: கூடுதல் பேரிடர் மீட்பு படை வருகை
குஜராத்தில் பெய்துவரும் பேய் மழைவெள்ளத்தில் சிக்கி 126 பேர் பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 55,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காந்திநகர்: குஜராத்தில் அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிப்படுவோரில், இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 126 வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளனர்.மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில், 1,400 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், பானஸ்கந்தா மாவட்டத்தில் தொடர்ந்து நிலைமை சிக்கலாக உள்ளது.வெள்ளப்பெருக்கு அதிகரித்தபடியே உள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

இதுபற்றி வருவாய்த்துறை செயலர் பங்கஜ் குமார் கூறுகையில், " இதுவரை குஜராத் வெள்ளம் காரணமாக, 126 பேர் இறந்துள்ளனர். இவர்களில், வெள்ளத்தில் மூழ்கி, 72 பேரும், இடி, மின்னலுக்கு 14 பேரும் பலியாகி உள்ளனர். மின்சாரம் தாக்கி 6 பேரும், எஞ்சியவர்கள் சுவர் இடிந்தும், இதர சேதங்களிலும் பலியாகியுள்ளனர் ", என்று தெரிவித்தார்.
மேலும், " பானஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன" என்றும் பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு, குஜராத் அரசு சார்பாக, தலா ரூ.4 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, ரூ.2 லட்சமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மீட்பு பணிகளை மேற்கொள்ள, டெல்லி, சென்னை, புவனேஸ்வர் உள்ளிட்ட இடங்களில் இருந்து, கூடுதலாக, 12 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் மழை இன்னமும் தொடர்வதால், மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications