வெளி மாநிலங்களில் மோடிக்கான பாதுகாப்பை அதிகப்படுத்த குஜராத் அரசு வேண்டுகோள்!
அகமதாபாத்: வெளி மாநிலங்களில் பிரசாரம் செய்ய செல்லும் போது குஜராத் முதல்வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் அம்மாநில அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை குஜராத் அரசு அனுப்பி வைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலர் எஸ்.கே. நந்தா, வெளி மாநிலங்களில் மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
தற்போது குஜராத் மாநிலத்தில் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு வெளி மாநில பிரசாரத்துக்கு செல்லும் போது போதுமானதாக இருக்காது. அதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டிருக்கிறோம் என்றார்.
தற்போது நரேந்திர மோடிக்கு இசட் பிளஸ் பிளஸ் பாதுகாப்பு என்.எஸ்.ஜி. கமாண்டோ படையினரால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் லோக்சபா தேர்தலுக்கான பாஜக பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது முதல் அவரது வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.