யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன்.. அமைச்சரின் மகனை வெளுத்த பெண் போலீஸ்.. இடமாற்றத்தை தந்த அரசு
காந்திநகர்: குஜராத் மாநில சுகாதாரத் துறை அமைச்சரின் மகனின் காரை தடுத்து நிறுத்திய பெண் போலீஸை அந்த மாநில அரசு இடமாற்றம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
குஜராத் மாநிலம், வராச்சா சாலை எம்எல்ஏ மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி. இவரது நண்பர்கள் ஊரடங்கு அமலில் உள்ள இரவு நேரத்தில் காரில் பயணம் செய்துள்ளார்கள்.
அப்போது அவர்கள் மாஸ்க் அணியவில்லை. அப்போது அங்கு பணியிலிருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தினார். இதையடுத்து அந்த நண்பர்கள் பிரகாஷ் கனானிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார்கள்.

வாக்குவாதம்
இதனை அறிந்த அமைச்சரின் மகன் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த பெண் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது சுனிதா, கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? யாராக இருந்தாலும் தடுத்து நிறுத்துவேன் என சுனிதா கண்டித்துள்ளார்.

காவலர்
அதன்பின்னர் அமைச்சரின் மகனும் பதிலுக்கு காவலரை எச்சரிக்க, காவலர் உரிய பதிலை அளித்துள்ளார். இந்த வீடியோ மற்றும் ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் உன்னை இதே இடத்தில் 365 நாட்களுக்கு நிற்க வைக்கிறேன், பார்க்கிறியா என அமைச்சர் மகன் கேட்டுள்ளார்.

விசாரணை
அப்போது சுனிதா, நான் ஒன்றும் உனக்கு அடிமை இல்லை என தெரிவித்தார். அமைச்சரின் மகனுக்கு எதிராகவும், சுனிதாவிற்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்தன. இந்த சூழலில் அமைச்சரின் மகன் பிரகாஷ் கனானியும் அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் தலைமையகம்
அதே சமயம் பெண் காவலர் சுனிதா காவல் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். எனினும் இந்த பிரச்சினைக்கு பிறகு சுனிதா மருத்துவ விடுப்பில் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுனிதாவை தொடர்பு கொண்ட போது அவர் எதையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே கைது செய்யப்பட்ட பிரகாஷும் அவரது நண்பர்களும் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications