சகிப்பின்மை பற்றி பேசியதால் ஷாருக்கானின் காரை தாக்கினோம்: விஷ்வ இந்து பரிஷத்
அகமதாபாத்: குஜராத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஷாருக்கான ரயீஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு குஜராத் மாநிலத்தில் நடந்து வருகிறது. ரயீஸ் படக்குழுவினர் அகமதாபாத்தில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பைக்குகளில் வந்த சிலர் ஹோட்டலில் வெட்டவெளியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நின்று கொண்டிருந்த ஷாருக்கானின் கார் மீது கற்கள் வீசித் தாக்கினர். இதில் கார் சேதம் அடைந்தது. சம்பவம் நடந்தபோது ஷாருக் ஹோட்டலில் இல்லை.
கைது
ஷாருக்கானின் காரை சேதப்படுத்தியது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 10 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் ஷாருக்கானின் காரை சேதப்படுத்திய சம்பவத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் குஜராத் பிரிவு பொறுப்பேற்றுள்ளது.
சகிப்பின்மை
நாட்டில் சகிப்பின்மை இல்லாதது கவலை அளிக்கும் விஷயம் என்று ஷாருக்கான் என்று கூறினாரோ அதில் இருந்து விஷ்வ இந்து பரிஷத், பாஜகவினர் அவருக்கு எதிராக உள்ளனர். அவர்கள் ஷாருக்கானுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
போராட்டம்
விஷ்வ இந்து பரிஷத்தின் குஜராத் மாநில செய்தித் தொடர்பாளர் ராஜு பட்டேல் கூறுகையில், ஷாருக்கானின் காரை சேதப்படுத்தியது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் ஆட்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சகிப்பின்மை பற்றி பேசிய ஷாருக்கிற்கு எதிராக நடந்து வரும் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதி தான் இந்த சம்பவம் என்றார்.
படப்பிடிப்பு
ரயீஸ் படப்பிடிப்பு பூஜில் நடக்கிறது. முன்னதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் 20 முதல் 30 பேர் பூஜ் மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்புக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது அவர்கள் ஷாருக்கானின் போஸ்டர்களை கிழித்து தீ வைத்து எரித்தனர்.