ஞானவாபியில் கோவிலை புனரமைக்க அனுமதி கோரிய வழக்கு.. எதிர்த்த 5 மனுக்களை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
வாரணாசி: ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 மனுக்களை உத்தர பிரதேச உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இதனருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்நிலையில் தான் மசூதி பகுதியில் பழமையான இந்து கோவில் சிங்கார கவுரி உள்ளதாகவும், இந்த கோவிலை வழிபட அனுமதி கோரியும் பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ளவும், ஆய்வை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து பல சர்ச்சைகள் கிளம்பின. சர்ச்சைகளுக்கு நடுவே ஆய்வு பணிகள் தொடங்கியது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றமும் ஆய்வுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்திய தொல்லியல் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வை தொடங்கியது. இந்த ஆய்வு தொடர்ந்து வந்த நிலையில் நேற்று வாரணாசி நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தகவல் ரகசியமாக உள்ளது. இந்நிலையில் தான் ஞானவாபி வளாகத்தில் இருப்பதாக கூறப்படும் கோவிலை புனரமைக்க அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை எதிர்த்து உத்தர பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் மற்றும் அஞ்சுமான் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது அந்த 5 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வாரணாசி நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்கை 6 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications