நாடாளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி கூறிய தகவல் உண்மையில்லை: டான் பாஸ்கோ பள்ளி மறுப்பு
மும்பை: டான் பாஸ்கோ பள்ளி குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்று அந்த பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வெமுலா தற்கொலை செய்த பிறகு வெகு நேரத்திற்கு டாக்டர்களை பரிசோதனை செய்ய அருகில் அனுமதிக்கப்படவில்லை.

சடலத்தை மறைத்து வைத்து அரசியல் நடந்தது. காவல்துறை 24 மணி நேரத்திற்கு அருகே கூட செல்ல முடியவில்லை. தெலுங்கானா அரசு இதற்கு முழு பொறுப்பு என்றார்.
மேலும், 'டீஸ்டா செடல்வாட்' எழுதிய புத்தகம், மும்பை டான் பாஸ்கோ பள்ளியில் பாடப்புத்தமாக படித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இந்து-முஸ்லிம் பிரிவினைவாதத்தை தூண்டும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் (மண்டைக்காடு) இந்து-கிறிஸ்தவர் மோதிக்கொண்டனர் என்றெல்லாம் 4வது வகுப்பு பாடப்புத்தகத்தில் எழுதியிருந்தார் என்றார்.
டீஸ்டா செடல்வாட் இடதுசாரி ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளவர். சமீபத்தில் அவரது இல்லத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தியிருந்தது.
இந்நிலையில், டான் பாஸ்கோ பள்ளி முதல்வர் ஃபாதர் பெர்னார்ட் பெர்ணான்டஸ் கூறுகையில், "இரானி கூறியது போல அது பாடப்புத்தகம் கிடையாது. ஹேண்ட் புத்தகம். ஓராண்டு அதை சோதனை அடிப்படையில் பயன்படுத்தியது உண்மைதான். ஆனால் 2001ம் ஆண்டு முதல் அந்த பாடம் சொல்லி கொடுப்பதை நிறுத்தி விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வெமுலா, சடலம் அருகே டாக்டர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று இரானி கூறிய கருத்தை, வெமுலாவின் தாயார் மறுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications