தேசிய அளவில் உச்சத்தை எட்டிய அக்னிபாத் போராட்டம்.. ரயில்களுக்கு தீ வைப்பு! குருகிராமில் 144 தடை அமல்
குருகிராம்: ஹரியானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குருகிராம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 சதவீதம் பேர், ராணுவத்தில் 15 ஆண்டு கால பணிக்கு வைத்துக் கொள்ளப்பட்டு, மற்றவர்கள் ஒய்வூதியம் இன்றி வெளியேறும் வகையில் அக்னிபாத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

இந்த புதிய கொள்கையை பலதரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை திரும்பபெறக் கோரி பிஹார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியதால், ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. அதேபோல் ரயில்வே சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. சாலைகளில் பேருந்து கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதில் ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் வன்முறை உச்சத்தை எட்டியுள்ளதால், அந்த மாவட்டத்தில் 144 தடை உத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதார தலைநகரம் என்று கூறப்படும் குருகிராமில், 144 தடை உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதன் மூலம், சூழலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications