பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி.. ஹரியானா மக்களுக்கு சல்யூட்.. பிரதமர் மோடி பெருமிதம்
சண்டிகர்: ஹரியானாவில் தொடர்ந்து 3 வது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், பாஜகவுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கியுள்ள ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார். இந்த மகத்தான வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தொடர்ந்து 3வது முறையாக ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்கிற பொழுதில் பாஜக 48 இடங்களை பெற்றுள்ளது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய வாக்குப் எண்ணிக்கையின் தொடக்கத்தில் காங்கிரஸ்தான் அதிக இடங்களில் முன்னணியில் இருந்தது. ஆனால் சில மணி நேரத்தில் எல்லாமே தலைகீழாக மாறியது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எல்லாம் பாஜக இந்த முறை 20 முதல் 30 இடங்களை தான் பெறும் என்றும், காங்கிரஸ் 45 - 55 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று வெளிவந்தன. இதனால் பாஜகவிற்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியினர் குஷியில் இருந்தனர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.
ஹரியானாவில் தொடர்ந்து 3 வது முறையாக பாஜகவை வெற்றி பெற செய்த ஹரியானா மக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:- பாஜகவுக்கு மீண்டும் பெரும்பான்மை வழங்கியுள்ள ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறந்த நிர்வாகத்திற்கும், அரசியல் வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.
இது ஹரியானாவில் பாஜகவுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த மகத்தான வெற்றிக்காக பாடுபட்ட கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகள். நீங்கள் தான் வளர்ச்சி திட்டத்தினை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடமாட்டோம் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக தேர்தல் நடத்தப்பட்டது சிறப்பானது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications