பகவத் கீதையை பள்ளிப் பாடமாக்க ஹரியானா அரசு முடிவு
சண்டிகார் : ஹரியானா மாநில பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி இந்தியா வரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு பகவத் கீதையைப் பரிசாக அளித்து வருகிறார். சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப்பிட்ட மதம் ஒன்றைச் சேர்ந்த நூல் ஒன்றை எப்படி தேசிய நூலாக அறிவிக்க முடியும் என சர்ச்சை வெடித்தது. அதற்குப் பதில் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப் பட்டது.

இந்நிலையில், ஹரியானாவிலுள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையை பாடமாக சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மா கூறுகையில், 'அடுத்த கல்வி ஆண்டு முதல் பகவத் கீதையைப் பள்ளிகளில் பாடமாக சேர்க்க முடிவு செய்துள்ளோம். பகவத் கீதை வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது என்பதை சொல்லிக் கொடுக்கிறது. மனஅழுத்தத்தை போக்கும் வழிகளை கற்றுக் கொடுக்கிறது.
கீதையை வயதானவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஒதுக்கி விட முடியாது. வாழ்க்கை முழுவதும் ஒருவர் கீதையை வழிகாட்டியாக படிக்க தகுந்தது. கீதைதான் நமது வாழ்க்கை முறை. கீதையே நமது அறிவியல். கீதையே நமது பிரச்சனைகளுக்கு தீர்வு' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications