ஹரியானா: விவசாயிகள் மீது போலீசார் தடியடி- அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்க விவசாய சங்கங்கள் அழைப்பு!
சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஹரியானாவில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்கும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் நடத்தின.
மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் தலைநகர் டெல்லி எல்லைகளில் கடந்த 8 மாதங்களாக முகாமிட்டு விவசாயிகள் போராடியும் வருகின்றனர். மழை, பனி, வெயில் பார்க்காமல் இந்த போராட்டம் தொடருகிறது.
#WATCH | Haryana: Police baton charged farmers who were protesting at Bastara toll plaza area in Karnal pic.twitter.com/NlYiUnDJMr
— ANI (@ANI) August 28, 2021

டெல்லி போராட்டம்
இந்த பிரச்சனையில் தலையிட்ட உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மத்திய அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் விவசாய சட்டங்களை வாபஸ் பெற வைக்காமல் வீடு திரும்பப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர் விவசாயிகள். டெல்லி போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உ.பி உள்ளிட்ட மாநில விவசாயிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது டெல்லி ஜந்தர் மந்தரில் மாதிரி நாடாளுமன்றத்தை விவசாயிகள் தொடர்ந்து நடத்தினர். இதில் தமிழக விவசாயிகளும் பங்கேற்றனர்.

சட்டசபைகளில் தீர்மானம்
அத்துடன் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்கம், கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்படடது. தமிழக சட்டசபையில் இன்று மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்தன.

ஹரியானாவில் தடியடி
இதனிடையே போராடும் விவசாயிகளை தொடர்ந்து விமர்சித்து வரும் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரியா பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இருகே விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் விவசாயிகளை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர். இதில் பல விவசாயிகள் படுகாயமடைந்தனர். சூரஜ்பூர் சுங்க சாவடி அருகே இந்த போராட்டம் நடைபெற்றது.

நெடுஞ்சாலைகள் முடக்கம்
ஹரியானா விவசாயிகள் மீதான தடியடிக்கு விவசாய சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இந்த தடியடி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கொந்தளித்து போய் இருக்கும் விவசாயிகள் ஹரியானாவில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்கும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஹரியானா போலீஸ் தடியடி நடத்தியதில் யாரேனும் உயிரிழந்தால் இந்த போராட்டம் காலவரையின்றி நீடிக்கும் எனவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications