ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் மீது கறுப்பு மை வீசியதால் பரபரப்பு!
ஹத்ராஸ்: உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூற சென்ற ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் மீது கறுப்பு மை வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
ஹத்ராஸில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தை உலுக்கி எடுத்திருக்கிறது. ஹத்ராஸ் சிறுமியின் பெற்றோரை அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.
ஆனால் உத்தரப்பிரதேச அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை ஏவிவிட்டிருக்கிறது. ஹத்ராஸ் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுக்கப்பட்டு போலீசாரின் வன்முறை வெறியாட்டத்தில் சிக்கினர். இதேபோல் திரிணாமுல் காங். மூத்த தலைவர் டெரிக் ஓ பிரைன் போலீசாரால் தள்ளிவிடப்பட்டார்.
ஹத்ராஸ் சென்ற பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 400 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் ஹத்ராஸ் சென்று தலித் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின் செய்தியாளர்களிடம் சஞ்சய் சிங் பேசிக் கொண்டிருந்த போது தீபக் ஷர்மா என்ற நபர், அவர் மீது கறுப்பு மையை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் தீபக் ஷர்மாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.