மம்தா முதுகில் குத்திய யூசுப் பதான்.. அமித்ஷாவால் தி.காங்., டூ பாஜக ஆதரவு? மொஹுவா மொய்தா ‘அட்டாக்'
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் கட்சியில் தற்போது கடும் பிளவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 20 எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் ஒருவர். இந்நிலையில் தான் அமித்ஷாவுக்கு பயந்து அவர் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மொஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் கட்சி, பாஜகவிடம் தோல்வியை சந்தித்தது. முதல்வராக இருந்த மம்தா பானர்ஜி ஆட்சியை பறிகொடுத்ததும், அவரும் போட்டியிட்ட சட்டசபை தொகுதியில் தோற்றார்.
மொத்தம் 294 சட்டசபை தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணியின் தலைவராக இருக்கும் முதல் முறை எம்எல்ஏவான ரிதப்ரதா பானர்ஜி சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார்.
இந்த எம்எல்ஏக்கள் வரிசையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 20 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா , லோக்சபா என்று இரு சபைகளிலும் சேர்த்து மொத்தம் 41 எம்பிக்கள் உள்ளனர். இதில் லோக்சபாவில் 28 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 13 எம்பிக்களும் உள்ளனர்.
இவர்களில் 20 பேர் பாஜக ஆதரவு நிலைபபாட்டை எடுத்துள்ளனர். இவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தனி அணியாகவும், நாடாளுமன்றத்தில் பாஜக ஆதரவாக செயல்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை கட்சியின் தலைமை கொறடா ககோலி கோஷ் தஸ்திதார் உறுதிப்படுத்தினார். எம்பிக்கள் தங்களின் நிலைப்பாடு குறித்த கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கி உள்ளனர்.
இந்த அதிருப்தி எம்பிக்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானும் உள்ளார். இவர் கடந்த 2024ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆதீர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராகபஹரம்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். யூசுப் பதான் உள்பட 20 திரிணாமுல் எம்பிக்கள் அதிருப்தியாளர்களாக இருந்தாலும் கூட தற்போது கட்சியில் இருந்து விலகுவதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் தனி குழுவாக செயல்பட திட்டமிட்டுள்ளனர். கட்சி மாறினால் அவர்களின் பதவி பறிபோக வாய்ப்புள்ளது என்பதால் அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளர்களாக செயல்ட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் யூசுப் பதானை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணாநகர் தொகுதியின் எம்பி மெஹுவா மொய்த்ரா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி மொஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில், ''யூசுப் பதான் நீங்கள் அமித்ஷா அழைத்ததால் அவசரமாக டெல்லி செல்கிறீர்கள்? கொஞ்சமாவது தைரியமாக இருங்கள். நீங்கள் இநதியாவுக்காக விளையாடியவர். எங்கள் மாவட்ட மக்கள் உங்களை மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தல் வெற்றி பெற செய்துள்ளனர். கொஞ்சமாவது மானமும், தன்மானத்துடன் இருங்கள்'' என சாடியுள்ளார்.
முன்னதாக யூசுப் பதான் தனது எம்பி பதவியை கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்காக விட்டு கொடுக்க உள்ளதாகவும், இதுதொடர்பாக சவுரவ் கங்குலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை சவுரவ் கங்குலி மறுத்தார். இந்நிலையில் தான் தற்போது யூசுப் பதான், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் குழுவில் சேர்ந்து பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications