குவாரி மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை பந்தாடும் கர்நாடக அரசு!
பெங்களூர்: சட்ட விரோத குவாரி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பணியிடமாற்றம் செய்யப்பட்ட கர்நாடக மாநில பெண் கலெக்டருக்கு ஹைகோர்ட் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஹாசன் மாவட்டத்தின் கலெக்டராக பெண் ஐஏஎஸ் அதிகாரியான ரோகினி சிந்தூரியை நியமித்தது அரசு. நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற ரோகினி சிந்தூரி, ஹாசன் மாவட்டத்திலுள்ள சட்ட விரோத குவாரிகள் மீது சரமாரி ரெய்டுகளை நடத்தி நூற்றுக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தார்.

இதையடுத்து, குவாரி மாஃபியாக்கள், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்தன. இதனால், இவ்வாண்டு ஜனவரி மாதம், அதாவது ஆறே மாதங்களில், ரோகினி சிந்தூரியை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் தலையீடு காரணமாக மார்ச் 5ம் தேதிவரை ரோகினி சிந்தூரி பணியிடமாற்றம் தடைபட்டது. இதனிடையே, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில், ரோகினி சிந்தூரி தனது பணியிடமாற்றத்தை எதிர்த்து முறையீடு செய்தார்.
ஐஏஎஸ் பதவியில் உள்ளவர்களுக்கு, தேவையின்றி, குறைந்தபட்சம் 2 வருடங்கள் பணியிடமாற்றம் செய்ய கூடாது என்ற விதிமுறையை காண்பித்து ரோகினி சிந்தூரி தரப்பு வாதிட்டது. இருப்பினும், தலைமைச் செயலாளரிடம் இதனை தெரிவிக்குமாறு கூறி வழக்கை முடித்துவைத்தது, தீர்ப்பாயம். இதையடுத்தும் விடாத ரோகினி சிந்தூரி, கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், இன்று உத்தரவு பிறப்பித்த ஹைகோர்ட், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை நிறுத்தி வைத்தது. தீர்ப்பாயம் மீண்டும் விசாரணை நடத்தி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட ஹைகோர்ட், அதுவரை, ஹாசன் மாவட்ட கலெக்டராக ரோகினி சிந்தூரி பதவியில் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பாயத்தில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
கர்நாடகாவில் நேர்மையான அதிகாரிகள் பந்தாடப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் உள்ளன. கணபதி உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகள் கூட பணி அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications