பள்ளி வளாகத்தில் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்- அவுரங்காபாத்தில்!
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே ஓஸ்மன்புராவில் உள்ள ஏக்நாத் நகர் மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சுரேஷ் வாகுலே. இவர் அதே பள்ளியில் படித்து வந்த 12 வயது மாணவியை மிரட்டி, கடந்த 10ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மாணவியை சுரேஷ் மிரட்டியுள்ளார்.
வீடு திரும்பிய மாணவி பலாத்காரத்தால் உடல்நலம் பாதிக்கப் பட்டார். பெற்றோர் நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியல் பலாத்காரம் செய்ததை அவர் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுரேஷ் மீது அம்மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், தலைமறைவாக இருந்த சுரேஷை கடந்த 12ம் தேதி கைது செய்தனர்.
அவர் மீது பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு சுரேஷை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே மாணவியை போலீசார் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். மருத்துவப் பரிசோதனை முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிவிக்கப் பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவற்றைப் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளி வளாகத்தில் சிறுமி ஒருவர் தலைமை ஆசிரியரால் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.