படகில் பாயும் தண்ணீர்.. உயிர் போகும் நேரத்திலும் மகனை அணைத்தபடி இருந்த தாய்.. படகு விபத்து வீடியோ
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில், மரணத்தின் விளிம்பிலும் தனது மகனைப் பிரியாத ஒரு தாயின் பாசம் ஒட்டுமொத்த தேசத்தையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் உள்ளே வரும்போதும் மகனை அந்த தாய் இறுக்கப் பிடித்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூர் அருகே உள்ள பர்கி அணை அங்குப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகும். இந்த பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சுற்றுலாவுக்கு வருவார்கள். அதிலும் இப்போது கோடைக் காலம் என்பதால் பொதுமக்கள் பலரும் அங்குக் குவிந்து வந்தனர். இந்தச் சூழலில் அங்கு மிக மோசமான விபத்து வியாழக்கிழமை மாலை நடந்தது.

தாய்- மகன்
பர்கி அணையில் அரங்கேறிய இந்த விபத்து, ஒரு கோரத் தாண்டவமாக மாறியுள்ளது. சுமார் 30 பயணிகளுடன் சென்ற அந்தச் சொகுசுப் படகு, திடீர் புயல் காற்றினால் நிலைதடுமாறி நதியின் நடுவே கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்த விபத்து குறித்த வீடியோக்கள் இணையத்தில் இப்போது வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதில் தாய் ஒருவர் தனது மகனை இறுக்கி அணைத்தபடியே உயிரிழந்தார். அவரது சடலத்தை அணையில் இருந்து எடுத்த போது, மீட்புப் படையினரே கலக்கமடைந்தனர்.
பகீர் வீடியோ
இதற்கிடையே விபத்து நடப்பதற்குச் சில நொடிகள் முன்பாகப் படகிற்குள் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கூட, நான்கு வயது சிறுவனை அவனது தாய் தனது நெஞ்சோடு இறுக்கி அணைத்தபடி அமர்ந்திருக்கிறார். படகுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் அலறியபடியே ஒருவருக்கொருவர் லைஃப் ஜாக்கெட்களை மாற்றிக் கொள்ளும் பதற்றமான காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
🚨 Jabalpur Cruise Last Video: People fighting for life
— Devanshu Mani Tripathi (@devanshu_mani) May 1, 2026
The video was captured just 15 minutes before the cruise sank in the river. You can see the sheer panic people desperately fighting for their lives as the water began to rise and engulf the boat.
This shocking footage has… pic.twitter.com/z2pNogMNC9
லைஃப் ஜாக்கெட்
அப்போது அந்தத் தாய் தனது மகனைத் தனது அதே லைஃப் ஜாக்கெட்டிற்குள் வைத்து அணைத்தபடி பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இருப்பினும், இதுவே தான் சிக்கலாக மாறியிருக்கிறது. அந்த மகனுக்குத் தனியாக ஒரு லைப் ஜாக்கெட்டை கொடுத்திருந்தால் இருவரும் தப்பி இருப்பார்கள். இருப்பினும், மகனுக்குத் தனி லைப் ஜாக்கெட் தராமல் தன்னுடைய லைப் ஜாக்கெட்டிலேயே அணைத்ததே சிக்கலாக மாறியிருக்கிறது.
விபத்து நடந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, அந்தத் தாயும் மகனும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். உயிரிழந்த பிறகும் கூட அந்தத் தாய் தனது மகனை விடவில்லை. அதே லைஃப் ஜாக்கெட்டிற்குள் அணைத்தபடியே இறந்து இருவரும் உயிரிழந்தனர்.. மரணத்திலும் பிரியாத அந்தப் பாசம் அங்கிருந்த அதிகாரிகளையும், அமைச்சரையும் கூடக் கண்ணீர் விட வைத்தது.
விபத்துக்குக் காரணம் என்ன?
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அலைகள் கொந்தளிப்பாகி படகு நிலைதடுமாறியது. பொதுவாக வானிலை மோசமடைந்தால் படகுகளை இயக்க மாட்டார்கள். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் அன்றைய தினம் படகை இயக்கியுள்ளனர். நடுவில் கூட வானிலை மோசமடைந்ததால் கரைக்குத் திரும்புமாறு பயணிகள் சிலர் சொல்லியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அதைக் கேட்காமல் படகைத் தொடர்ந்து செலுத்தியதாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 22 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மாநிலப் பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் மோகன் யாதவ் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications