விடிய விடிய மும்பையை மூழ்கடித்த கனமழை – பள்ளிகளுக்கு “லீவ்”; ரயில் சேவை பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடும் மழை காரணமாக புறநகர் மெட்ரோ ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் முதல் அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் மழையால் மேற்கத்திய மற்றும் மத்திய ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர் ரயில்கள் அந்தேரி வரை இயக்கப்படுகின்றன. அதே போல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கல்யாண் மற்றும் அதற்கு பின் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
தாதர் மேற்கு சானே குருஜிமார்க் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம், மகாலட்சுமி ஜங்ஷன், பூலாபாய் தேசாய் மார்க், கோபால் தேஷ்முக் ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நெரிசல் காரணமாக வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்தபடி செல்கிறது.

தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று பேருந்து போக்குவரத்து கழகத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மும்பை பல்கலைக்கழகமும் தேர்வுகளை ஒத்திவைத்து உள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு, மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இன்று காலை 8 மணிவரையில் சிட்டியில் 180 மி.மீட்டர் மழை பதிவாகிஉள்ளது என்று மும்பை மாநகராட்சி பேரிடர் மேலாண்மை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications