சுழற்றி அடித்த சூறாவளி, கொட்டித் தீர்த்த மழை: இருளில் மூழ்கிய பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் புதன்கிழமை மாலை பெய்த கனமழை மற்றும் சூறாவளியால் 85 மின்கம்பங்கள், 44 மரங்கள் சரிந்து விழுந்தன.
கோடை காலம் துவங்கியதில் இருந்து பெங்களூரில் அவ்வப்போது இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. பிற்பகலில் மேகம் கூடி மாலையில் பெய்யத் துவங்கும் மழை மணிக்கணக்கில் கொட்டித் தீர்த்துவிடுகிறது.

ஒவ்வொரு முறையும் கனமழை பெய்து தெருக்கள் எல்லாம் வெள்ளக்காடாகி விடுகிறது. இந்நிலையில் புதன்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சுழற்றி சுழற்றி அடித்த காற்றில் 44 மரங்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும் 85 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.
கனமழையால் கோரமங்களா, ஒயிட்பீல்ட், ஹெப்பால் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின. மரங்களை அப்புறப்படுத்தி மின் வினியோகத்தை சீரமைக்க அதிகாரிகள் போராடினர்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை பெங்களூரில் 40 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஹெப்பால் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் 17 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்தனர்.












Click it and Unblock the Notifications