குஜராத் தேர்தல்.. தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய பிரதமரின் தாய்.. நெகிழ்ந்த வாக்காளர்கள்
காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாகநடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் தாயார் 100 வயதை கடந்திருந்தாலும் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார்.
கடந்த 1ம் தேதி மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைகிறது. இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சிறு கருத்து வேறுபாட்டுக்கு எல்லாம்... ஆளுநரை வாபஸ் பெறு முடியுமா? ஆளுநர் ரவிக்கு தமிழிசை சப்போர்ட்
பிரதமரின் தாய்
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் பப்ளிக் பள்ளியில் வாக்களித்தார். அவரையடுத்து காந்திநகரின் ரேசன் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இந்நிலையில் தள்ளாத வயதிலும் வந்து வாக்களித்துள்ளார். இது அங்கிருந்த சக வாக்காளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்று காலை ஒன்பது மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 4.75% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து தற்போது நண்பகல் 1 மணி நிலவரப்படி சுமார் 34.74% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பனஸ்கந்தா மாவட்டத்தில் 21.08% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு
இந்த மாவட்டத்தில் 9 தொகுதிகள் இருக்கின்றன. இதில் அதிகபட்சமாக தாராட் தொகுதியில் 25.58% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேபோல டான்டா தொகுதியில் குறைந்தபட்சமாக 17.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலம் முழுவதும் மொத்தமாக 14 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 61 கட்சிகளை சேர்ந்த 833 வேட்பாளர்கள் இதில் போட்டியிடுகின்றனர். இதில் 69 பேர் பெண் வேட்பாளர்களாவார்கள். அதேபோல 285 பேர் சுயேட்சை வேட்பாளர்களாவார்கள். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் குடும்பத்துடன் வாக்களித்திருந்தனர். முதல் கட்ட தேர்தல் எந்த சர்ச்சையும் இல்லாமல் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட தேர்தலில் சிறு சிறு சலசலப்புகள் தொடங்கியுள்ளன.
மோதல்
அதாவது, டான்டா தொகுதியில் நேற்றிரவு காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் பாஜக வேட்பாளர்களின் கார்கள் ஒன்றுடன் ஒன்று 'லைட்டாக' மோதியிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பின் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கார் விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பினர் மோதிகொண்டதில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மற்றபடி எவ்விதமான பெரும் அசம்பாவிதங்களும் ஏற்படவில்லையென்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த தொகுதி பழங்குடி மக்களுக்கான தொகுதியாகும். இங்கு கடந்த 2012ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ம் ஆண்டு பாஜக ஒரு முறை வென்றிருக்கிறது. அதற்கு முன்னர் கூட காங்கிரஸ்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
வேண்டுகோள்
ஆக இப்படியாக தேர்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று காலை வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அனைவரும் வாக்களிக்க வேண்டும். குறிப்பாக இளம் தலைமுறை பெண்கள்-ஆண்கள் யாரும் வாக்களிக்க தவறக்கூடாது" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக 100 வயதை எட்டிய பிரதமரின் தாய் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.