விபத்தினால் மூக்கு எலும்பில் அறுவைசிகிச்சை - இன்று காலை வீடு திரும்பிய ஹேமமாலினி!
ஜெய்பூர்: ஜெய்ப்பூரில் விபத்தில் காயமடைந்த பிரபல இந்தி நடிகையும், பா.ஜ.க கட்சியின் எம்.பியுமான ஹேமமாலினி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து ஜெய்ப்பூர் நகருக்கு பரத்பூர் வழியாக தனது உதவியாளருடன் காரில் வந்து கொண்டிருந்தார். காரை அவரது டிரைவர் மகேஷ் சந்த் தாக்குர் ஓட்டினார்.

இவர்களது கார் ஆக்ரா-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ராஜஸ்தானில் உள்ள தவுசா நகர் அருகே வந்தபோது எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் சின்னி என்ற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
இவ்விபத்தில் ஹேமமாலினி, எதிரே வந்த காரில் இருந்த ஹனுமான் சிங், அவருடைய மனைவி ஷிகா, சோமில், சீமாஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து ஹேமமாலினி ஜெய்ப்பூரில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மற்ற நால்வரும் தவுசாவில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெற்றியில் படுகாயம் அடைந்த ஹேமமாலினிக்கு நேற்று முன்தினம் இரவு சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அதில் அவருடைய மூக்கின் சுவாசப்பாதை எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் நடத்தினர். இதையடுத்து அவருடைய உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று காலை ஜெய்பூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ஹேமமாலினி வீடு திரும்பினார்.
முன்னதாக, ஹேமமாலினி விபத்தில் இறந்த குழந்தை குறித்த விசாரிக்காததற்கு அவரது மகள் இஷா தியோல் நிருபர்களுக்கு பதிலளித்தார். அதில் அவர், "விபத்து நடந்த தாக்கத்திலும், அதிர்ச்சியிலும் மற்ற எதையும் பற்றி யோசிக்கும் மனநிலையில் அம்மா இருந்திருக்க மாட்டார்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications