கொரோனாவால் உயிரிழந்த வங்காளி.. அரசே நடத்தும் இறுதிச் சடங்கு.. உறவினர்களுக்கு அஸ்தி மட்டும்தான்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் நபரின் உடலை உறவினர்களிடம் கொடுக்கக் கூடாது என அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 415-ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டம் டம்டம்மை சேர்ந்த 57 முதியவர் காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு மார்ச் 20-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குடும்ப உறுப்பினர்
மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் இவர் 4ஆவது நபராவார். இவர் நேற்று மாலை 3.35 மணிக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழந்து மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். இவர் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏதும் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து இவரது குடும்ப உறுப்பினர்களும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வாய்ப்புகள் குறைவு
இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் என்பதால் அது பாதித்தவர்களின் உடல்களை எப்படி கையாள்வது என்பது குறித்து யாருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டால் அந்த உடலில் இருந்து சுகாதார பணியாளர்களோ குடும்பத்தினரோ பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.

கடிதம்
கொரோனா பாதித்தவரின் நுரையீரல்கள் பெரிதும் ஆபத்தானவை என்பதால் அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சால்ட் லேக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் பாதுகாக்கப்பட்ட கவசங்கள், தண்ணீர் புகாத மேலாடை, கையுறைகள், மாஸ்க்கள், கண் உறைகள் ஆகியவற்றை சுகாதாரத் துறை பணியாளர்கள் அணிய வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புண்கள், ஓட்டைகள்
கொரோனாவால் பலியானவரின் உடலை எப்படி தகனம் செய்வது என்பது குறித்து அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கிருமிகள் வெளியே வராதபடி ஒரு உறையில் உடலை நன்று சுற்ற வேண்டும். அவருக்கு இணைக்கப்பட்ட குழாய்கள் உள்ளிட்டவை நீக்கப்பட வேண்டும். அவரது உடம்பில் இருக்கும் ஓட்டைகள் மற்றும் புண்களை 1 சதவீதம் ஹைப்போகுளோரைட் கொண்டு ரத்தம், சீழ், கிருமிகள் கசியாத பொருளை கொண்டு அடைக்க வேண்டும்.

கங்கா தீர்த்தம்
அது போல் உயிரிழந்தவரின் வாய், மூக்கு உள்ளிட்ட துளைகளை அடைக்க மருத்துவமனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவிலான குடும்ப உறுப்பினர்களே இறுதியாக அவரது முகத்தை தூரத்தில் இருந்து பார்க்க அனுமதிக்கப்படுவர். அது போல் இறுதி சடங்கு செய்ய ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். அவர் குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கங்கா தீர்த்தத்தை உடலின் மீது தெளிப்பார்.

வீடியோ
இறுதி சடங்கின் போது உடலை தொடவோ, முத்தம் கொடுக்கவோ, குளிப்பாட்டவோ, கட்டி பிடிக்கவோ அனுமதி ஏதும் இல்லை. இறுதி சடங்குகள் நடந்த பிறகு அவரது அஸ்தி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். இந்த இறுதிச் சடங்கின் போது உடனிருக்கும் சுகாதார பணியாளர் இந்த இறுதிச் சடங்கை வீடியோவாக எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.












Click it and Unblock the Notifications