அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சி: ஜே.என்.யூ மாணவர்கள் டெல்லி போலீசில் நள்ளிரவில் சரண் !
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள், தீவிரவாதி அப்சல் குருவிற்கு ஆதரவாக கோஷமிட்ட வழக்கில், தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள உமர் காலித் மற்றும் சக மாணவர் அனிர்பன் பட்டாச்சாரியா ஆகிய இருவரும் டெல்லி வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
கடந்த 9ம் தேதி ஜே.என்.யூ வளாகத்தில் ஜனநாயக மாணவர் அமைப்பினர் அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அப்போது பாகிஸ்தான் ஆதரவு, இந்தியா எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் மூளையாக செயல்பட்ட உமர் காலித், அனிர்பன் பட்டாச்சாரியா ஆகியோர்தான், இவ்வாறு கோஷமிட்டதாகவும், கன்யாகுமார் கோஷமிடவில்லை என்றும் தெரியவந்தது.

இதையடுத்து உமர் மற்றும் அனிர்பன் தலைமறைவாகினர். அவர்கள் மீதும் டெல்லி போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தலைமறைவு மாணவர்கள் இருவரும் ஜே.என்.யூ திரும்பினர். கேம்பசுக்குள் போக போலீசாருக்கு பல்கலை. நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை என்பதால், மாணவர்களை போலீசார் கைது செய்யவில்லை.
இதனிடையே, மாணவர்கள் சரணடைய விரும்புவதாக காவல்துறைக்கு மாணவர்களின் வக்கீல் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதை போலீசார் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, மாணவர்கள் எந்த இடத்தில் வைத்து, எந்த நேரத்தில் வைத்து சரணடைய விரும்பினார்களே அதே போல, அவர்கள் சரணடைய காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று, கோர்ட் உத்தரவிட்டது. நாளைக்குள் மாணவர்கள் சரணடைய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. மேலும், பல்கலை. வளாகத்திற்குள் சென்று மாணவர்களை கைது செய்ய தாக்கல் செய்த ஒரு பொது நல மனுவை ஹைகோர்ட் நேற்று தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இரவு 12 மணி அளவில் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சாரியா ஆகிய இருவரும் டெல்லி வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் காலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications