ரயில் விபத்தில் படுகாயமடைந்த தமிழக பயணிகளை விமானம் மூலம் அழைத்துவர ஏற்பாடு: விரைந்தது மருத்துவக்குழு
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்து விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்டு, ரயில்கள் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 900 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அந்த வழித்தடத்தில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வர தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 53 பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், 14 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும், மற்ற பயணிகளை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்புகள் உறுதி செய்யப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருந்து மருத்துவக் குழு ஒடிசா விரைந்துள்ளது. ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 55 நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் தயார் நிலையில் 4 அரசு மருத்துவமனைகள் உள்ளன. ராஜீவ் காந்தி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்க மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த 250 பயணிகளுடன் சிறப்பு ரயில் பாதராக் பகுதியில் இருந்து புறப்பட்டது. நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications