இந்திய சுற்றுப்பயணத்தின்போது ஹிலாரிக்கு கையில் எலும்பு முறிவு... பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக தகவல்
டெல்லி : இந்தியா வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி அடைந்த காரணத்தையும், அதிபர் டிரம்ப் எப்படி வெற்றி பெற்றார் என்ற காரணத்தையும் புத்தகமாக எழுதி உள்ளார் அமெரிக்காவின் முன்னாள் அமைச்சரும், அந்நாட்டு முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளிண்டன்.
அந்த புத்தக அறிமுக நிகழ்ச்சிக்காக மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தார் அவர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹிலாரி தங்கியிருந்தார். அப்போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து அவருக்கு கையில் வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஹிலாரியின் கையில் லேசான எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர். அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதன்பின்னர் அவர் சில நிகழ்ச்சிகளை மட்டும் ரத்து செய்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, இந்தப் பயணத்தின்போது மத்தியப்பிரதேச மாநிலம் மாண்டு நகரில் பழங்கால அரண்மனையான ஜாகஸ் மகால் உள்ளிட்ட பல இடங்களை ஹிலாரி சுற்றிப்பார்த்தார். அப்பொழுது படிக்கட்டில் நடந்து வரும் போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி இருமுறை ஹிலாரி கிளின்டன் கீழே விழுந்தார்.
இந்தக்காட்சியை அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.