ஹிந்தி பேசும் மாநிலங்கள் பாஜகவுக்கு ஓட்டு போடும்னு நினைச்சீங்கல்ல.. அடியே அங்கதான் விழுந்திருக்கு!
டெல்லி: 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, ஹிந்தி மொழியை பெருவாரியாக பேசும் வட இந்தியாவின் 10 மாநிலங்களில் உள்ள 225 தொகுதிகளில் 176 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக வலுவான கோட்டையாக அவற்றை உருவாக்கியிருந்தது. ஆம்.. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை பாஜகவின் எஃகு கோட்டை என்றே மாறியிருந்தது.

இருப்பினும், தற்போதைய தேர்தல் முடிவு ட்ரெண்ட்படி, இந்த 225 இடங்களில் 127 இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜகவுக்கு அது எஃகு கோட்டையல்ல, மண் கோட்டை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற முக்கிய மாநிலங்களில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 இடங்களில் வெறும் 32 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது பாஜக. ஹரியானாவில் 10 இடங்களில் 5 இடங்களிலும், ராஜஸ்தானில் 25 இடங்களில் 14 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பீகார் மற்றும் ஜார்கண்டிலும் பாஜக பலவீனமாகவே பெர்பார்மன்ஸ் செய்துள்ளது. உத்தரகாண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்திய அரசியலில் இருந்து காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற பாஜக கோஷம் இத்தோடு முடிவுக்கு வரும் என்று நம்பலாம். 2019ல் 52 இடங்களாகக் குறைக்கப்பட்ட காங்கிரஸ் நிலைமை இப்போது 95 இடங்களுக்கு மேல் முன்னிலையாக மாறியுள்ளது. கூட்டணி கட்சிகளிடம் காங்கிரஸ் இறங்கிப்போனது இதற்கு காரணம்.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு இது வழிவகுத்தது. மகாராஷ்டிராவில், கடந்த தேர்தலில், 1 இடங்களை பெற்றிருந்த அக்கட்சி, இப்போது, 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில், காங்கிரஸ் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, 2019 இல் ஒன்றிலுமே வெற்றி பெறவில்லை. ஹரியானாவிலும் காற்று மாற்றி காங்கிரஸ் பக்கம் வீசியுள்ளது. 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா மற்றும் நியாய யாத்ரா ஆகியவை காங்கிரஸின் செல்வாக்கை வட இந்தியாவில் கணிசமாக உயர்த்தியுள்ளன. இந்த யாத்திரைகளின் போது அவர் பயணித்த மாநிலங்கள் காங்கிரஸை வெற்றியை நோக்கி நோக்கி நகர்த்துகின்றன.
கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல், இரண்டு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிகிறது. வயநாட்டில் அவர் 59.53% வாக்குகள் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜாவை விட முன்னணியில் உள்ளார். பாஜக மூன்றாவது இடத்தில் உள்ளது. ரேபரேலியில், ராகுல் தனது தாய் சோனியா காந்தியின் 2019ம் ஆண்டின் வாக்குகளை விஞ்சி, குறைந்தது 66% வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications