'அடிமை மொழி' ஆங்கிலத்தை விரட்டியடிப்போம்.. நாட்டு ஒருமைப்பாட்டுக்கு உதவுவது ஹிந்தியே..இது ஆர்எஸ்எஸ்
பெங்களூர்: இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஆங்கிலத்தை விரட்டியடிக்கும் சக்தி ஹிந்தி மொழிக்கு உண்டு, நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டுமானால், ஹிந்தி பங்களிப்பு அவசியம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது பாஞ்சஜன்யா பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும், பாஞ்சஜன்யா பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் இதுபற்றி கூறியுள்ளதாவது: வெள்ளைக்காரர்கள் நாட்டை விட்டு சென்று இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அவர்கள் கொண்டு வந்த ஆங்கில மொழிக்கு நாம் அடிமையாக கிடக்கிறோம்.

ஆங்கிலத்துக்கு நம்மை அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் கும்பல்களை விரட்டும் சக்தி ஹிந்திக்கு உண்டு. சுப்ரீம்கோர்ட்டில் கூட அனைத்து அலுவல்களும் ஹிந்தியில் நடக்கின்றன. அரசின் கொள்கை முடிவுகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது மிகவும் ஆபத்தான போக்கு.
ஆங்கிலத்தை யாரும் விரும்பி கற்கவில்லை. ஆங்கிலேயர்களால் நம்மீது திணிக்கப்பட்டதுதான் ஆங்கிலம். நமது சுந்திரத்தை முழுமையாக பெற இன்னும் போராட வேண்டியுள்ளது. ஹிந்திக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஆங்கிலத்துக்கு மார்க்கெட் மற்றும் கோர்ட் ஆதரவு உள்ளது. பாரதத்தை சுய மரியாதை கொண்ட தேசமாக மாற்ற வேண்டுமானால், ஹிந்தியை பலப்படுத்த வேண்டும்.
பலரும் பல மொழி பேசி பிரிந்துகிடக்கும் இந்தியாவை, ஹிந்தி ஒருங்கிணைத்து, நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றும். அதேநேரம், மாநில மொழிகளை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. பிற மொழி ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் நாட்டை துண்டாடுவதற்காக ஆங்கிலத்துக்கு கொடி பிடிக்கிறார்கள். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications