வங்கதேசத்தினர் என நினைத்து இஸ்லாமிய குடும்பம் மீது தாக்குதல் – வெறியாட்டம் ஆடிய உ.பி இந்து அமைப்பு
காசியாபாத்: வங்கதேச நாட்டில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என நினைத்து தவறுதலாக இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களிலும் வெளியாகியுள்ளது.
வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து பதற்றம் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்த நாட்டு பிரதமர் ஷெக் ஹசீனா முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தொடர்ந்து அந்த மாநிலத்தில் இந்து, கிறிஸ்துவ, புத்த உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசுக்கு தலைமை வகிக்கும் முகமது யூனிஸ் சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே இந்து ரக்ஷா தல் என்கிற வலதுசாரி அமைப்பினர் வங்கதேச நாட்டினர் என்று நினைத்து தவறுதலா குடிசைப் பகுதிகளில் இருந்த இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக இந்து ரக்ஷா தல் அமைப்பின் தலைவர் பூபேந்தர் தோமர் என்கிற பிங்கி சௌத்ரி மற்றும் பதால் என்கிற ஹரி ஓம் ஆகிய இரண்டு முக்கிய குற்றவாளிகளை காசியாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அந்த குடிசைப் பகுதியில் சுமார் 100 - 150 குடும்பங்கள் இருக்கின்றனர். இரவு 7.30 மணியளவில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவிரிநகர் சரக உதவி ஆணையர் அபிஷேக் ஶ்ரீவத்சவா கூறுகையில், "வங்கதேச நாட்டினர் என நினைத்து இங்குள்ள இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். உண்மையில் இங்கு வங்கதேசத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதில் சம்மந்தப்பட்டு தலைமறைவாக உள்ளவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்." என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "திடீரென்று 30க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து 4-5 இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். வங்கதேசத்தினர் என நினைத்து பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோர் மீதும் நடத்தியுள்ளனர். நாங்கள் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. நாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லியும், அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர். அடிப்பதுடன் நிற்காமல் உடைமைகளுக்கு தீயும் வைத்தனர். எல்லாமே சேதமடைந்த பிறகுதான் காவல்துறையினர் வந்தனர்." என்றனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு இந்து ரக்ஷா தல் அமைப்பின் தலைவர் சௌத்ரி, "இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது நாங்கள்தான். இதற்கான முழு பொறுப்பையும் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதும் எங்களுக்கு தெரியும்." என்று பகிரங்கமாக கூறியுள்ளார். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோக்களையும் அவர் சமூகவலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த அமைப்பினர் வன்முறையில் ஈடுபடுவது இது முதல்முறை இல்லை. 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீதான தாக்குதல், 2020 ஆம் ஆண்டு ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வன்முறையிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications