பலாத்காரத்தால் கர்ப்பம்: எய்ட்ஸ் பாதித்த பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்தில் பிரசவம்
பிலாஸ்பூர்: மருத்துவர்கள் இல்லை என காரணம் கூறி, ஊழியர்கள் மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்ட கர்ப்பமான பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்திலேயே அழகிய குழந்தை பிறந்தது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் கடந்த வருடம் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த அப்பெண், சோதனை செய்து கொண்ட போது அவருக்கு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த நிறைமாத கர்ப்பிணியான அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே அவர் பிரசவத்துக்காக பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்றுள்ளார்.
அவரது மருத்துவக் குறிப்புகள் மூலம் அவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை அறிந்துகொண்ட மருத்துவமனை ஊழியர்கள் அப்பெண்ணை உள்ளே விட அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது டாக்டர் இல்லை. நாளை வாருங்கள் என தெரிவித்ததால், ஆனால் வீட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் இருந்த அப்பெண் கடும் குளிரிலும் மருத்துவமனை வளாகத்திலேயே உட்கார்ந்திருந்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி அதிகமாகி அங்கேயே குழந்தை பிறந்தது. அதை அறிந்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிவிரைவாக அவரை பிரசவ வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து ஆஸ்பத்திரி பொறுப்பாளர் டாக்டர் லகன்லாலிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர். இது குறித்து விசாரணை நடத்தப்படும். அதில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications