இந்தியாவில் முதல் முறை.. வெடிகுண்டு புரளி கிளப்பியதற்கு கோகுலுக்கு கிடைக்கப்போகுது ஆயுள் சிறை
பெங்களூர்: விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெங்களூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கோகுல் மீது ஆயுள் தண்டனை விதிக்கப்பட கூடிய சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு புரளி கிளப்பிய ஒரு குற்றத்திற்காக இந்தியாவில் முதல் முறையாக இந்த சட்டம் தற்போதுதான் பிரயோகிக்கப்படுகிறது.
டெல்லி மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக வாட்ஸ்சப் மூலமும், தொலைபேசி மூலமும் மிரட்டல் விடுத்த வழக்கில், பெங்களூரில் வசித்து வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கோகுல் (33) என்ற தனியார் ஊழியர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது, கடந்த சில மாதங்கள் முன்பு தனது மனைவி அனுராதாவை கொலை செய்த குற்றத்தையும் கக்கிவிட்டார். இந்நிலையில், விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக 'The Suppression of Unlawful Acts Against Safety of Civil Aviation (SUASCA) Act 1982' என்ற சட்டப்பிரிவின்கீழ் கோகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இச்சட்டத்தின் பிரிவு 3(1)(d)-ன்படி, அதிகபட்சமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும். இதுவரை வெடிகுண்டு புரளி கிளப்பிய யார் மீதும் இந்த சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விமான நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடக்கும்போது ஏற்படும் காலதாமதத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனிமேலும், இதுபோல விஷமிகள் புரளி ஏற்படுத்தாமல் இருக்க இந்த கடும் நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது.
2009ம் ஆண்டு, கோவாவில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், நோய் கிருமியுடன் கூடிய ஊசியை வைத்துக்கொண்டு, விமானத்தை கடத்துவதாக மிரட்டினார். அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது மேற்கண்ட சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த சட்டத்திற்கு கோகுல் இரையாகியுள்ளார். ஆனால், புரளி கிளப்பியதற்கே இவர் மீது இந்த சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோகுல் மீது திட்டமிட்டு மனைவியை கொலை செய்த வழக்கும் நிலுவையிலுள்ளதால், கோகுலால் இன்னும் 14 வருடங்களுக்கு முன்பாக வெளியுலகத்தை பார்க்க முடியாது. அவரது 3 வயது மகள் அதற்குள் 17 வயது மகளாக வளர்ந்து நிற்பாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications