ஆட்டத்தை ஆரம்பித்த அமித்ஷா.. 2 நாள் பயணமாக இன்று கொல்கத்தா சென்றார்.. சூடுபிடிக்கும் மே.வங்க தேர்தல்
2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றார் அமித்ஷா
கொல்கத்தா: 2 நாள் பயணமாக இன்று மேற்கு வங்காளம் சென்றுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில்... பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட நிலையில்... அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து, அடுத்த வருஷம் நடக்க போகும், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
பீகார் சட்டசபை தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களை பிடித்து, ஆட்சியை மறுபடியும் தக்க வைத்துள்ளது.
பெரிய கட்சி
இதையடுத்து, கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தை விட, அதிக தொகுதிகளில், பாஜக வெற்றியும் பெற்றது.. 74 தொகுதிகளில் வென்று, மாநிலத்தில், 2வது பெரிய கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில்தான், பீகாரை அடுத்து மேற்கு வங்கம் பக்கம் தன் கவனத்தை மொத்தமாக பாஜக திருப்பி வருகிறது.. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வருகிற மே மாதம் நடக்க இருக்கிறது.
மேற்கு வங்கம்
இந்த தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும்தான் கடுமையான, மற்றும் நேரடி போட்டி ஏற்பட உள்ளது... ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு திரிணாமுல் காங்கிரசும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.. அதேபோல, இந்த முறை மே.வங்கத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக "மிஷன் பெங்கால்" என்ற பெயரில் தேர்தல் பணிகளை அக்கட்சி தொடங்கி ஊக்குவித்து வருகிறது.
மம்தா
அதன் ஒரு பகுதியாகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களையும், முக்கிய பிரமுகர்களை பாஜக தன் பக்கம் சாய்த்து வருகிறது.. இது மம்தாவுக்கு பெரிய குடைச்சலை தந்து வருகிறது. மற்றொரு பக்கம், பாஜக தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை அங்கு ஆரம்பித்து விட்டனர்.. கட்சியின் தலைவர் ஜேபி நட்டா சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளம் சென்று ஆதரவு திரட்டினார்... அப்போது அவரது கார் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினார்கள்.
3 ஐபிஎஸ்
இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நட்டாவின் பயணத்திற்கான பாதுகாப்பு பணிகளுக்கு பொறுப்பான 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு டிரான்ஸ்பர் செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது... ஆனால், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவிக்க மே.வங்க அரசு மறுத்துவிட்டது... இதனால், மத்திய பாஜக அரசுக்கும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் இடையேயான அதிகார மோதலானது உச்சக்கட்டத்துக்கு போனது.. இப்படிப்பட்ட சூழலில்தான், அமித்ஷா மேற்கு வங்கம் சென்றுள்ளார்..
அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்ல உள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.. அந்த வகையில், இன்று விடிகாலை 2 மணிக்கு மேற்குவங்காளம் சென்றடைந்தார் அமித்ஷா. பாஜக கட்சி கூட்டங்களிலும், தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா பங்கேற்க உள்ளார்.
மதிய உணவு
மேலும், திரிணாமுல் காங்கிரசை விட்டு விலகிய பல பிரமுகர்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.. மேலும், மிட்னாப்பூரில் விவசாயி ஒருவரின் வீட்டில் மதிய உணவு சாப்பிட உள்ளர்.. அமித்ஷாவின் இந்த 2 நாள் சுற்றுப்பயணமானது, மேற்கு வங்க அரசியலில் அதிரடி மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று நம்புகிறர்கள் அரசியல் நோக்கர்கள்.