காஷ்மீர் சென்று திரும்பிய அனைத்துக் கட்சி குழு- மோடியிடம் ராஜ்நாத் விவரிக்கிறார்
டெல்லி: அனைத்துக் கட்சிக் குழுவிற்கு தலைமையேற்று 2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விரிவாக பேசவுள்ளார்.
காஷ்மீரில் ஜுலை 8ம் தேதி புர்கன் வானி கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்தது. வன்முறை போராட்டங்களில் இதுவரை சுமார் 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அங்கு அமைதியை ஏற்படுத்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 30 தலைவர்கள் அடங்கிய அனைத்துக் கட்சி குழு காஷ்மீர் சென்றது.

அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அம்மாநில முதலமைச்சர் மெக்பூபா பிரிவினைவாத அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் அதனை ஏற்க மறுத்து வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, முதலமைச்சர் மெக்பூபா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட அனைத்து கட்சிக் குழுவுடனான ஆலோசனைக் கூட்டம் காஷ்மீரிலும், ஜம்முவிலும் நடந்து முடிந்து டெல்லி திரும்பியுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அதே போன்று வியட்நாம், சீனாவின் 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ள பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங் சந்தித்து காஷ்மீர் நிலைமை குறித்தும், அங்கு நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து விரிவாக பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications