லிப்டில் சிக்கிய ராஜ்நாத் சிங்... சினிமா பாணியில் மேற்கூரை வழியாக தூக்கினர்!!
டெல்லி: டெல்லியில் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பழுதான லிப்டுக்குள் சிக்கிக் கொண்டார். பின்னர் அவர் மேற்கூரை வழியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
தெற்கு டெல்லியில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் படை தலைமையகத்தில் 'ஷவ்ரியா திவாஸ்' என்ற அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்தார்.

சி.ஆர்.பி.எப். படைப்பிரிவு டைரக்டர் ஜெனரல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு ஆகியோருடன் ராஜ்நாத் சிங், லிப்டில் மேல் மாடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென லிப்ட் இயங்காமல் நின்றது. இதையடுத்து லிப்டில் இருந்த அலாரமை அவர்கள் அழுத்தி ஒலிக்க செய்தனர்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், லிப்டில் சிக்கி இருந்த மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக மேற்கூரை வழியாக மீட்டனர். இதில் கடைசி நபராக ராஜ்நாத் சிங் லிப்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தத் தகவலை, தான் கலந்து கொண்ட விழாவில் ராஜ்நாத் சிங்கே சுவாரஸ்யமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications