சர்வீஸ் டாக்ஸ் தகராறு.. பெங்களூரு ஹோட்டலில் பெண் வாடிக்கையாளரை தாக்கிய கேஷியர்!
பெங்களூரு: அதிக காசு கேட்கிறீர்களே என்று கேட்ட பெண்மணி, ஹோட்டல் கேஷியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பானசவாடி அருகேயுள்ள கம்மனஹள்ளியில் உள்ளது, சுக்சாகர் என்ற சைவ உணவகம். சம்பவத்தன்று, ஹெச்ஆர்பிஆர் லேஅவுட்டை சேர்ந்த ஷரோன் நிகல் என்ற 35வயது வங்கி பெண் ஊழியர், அந்த உணவகத்திற்கு காலை சிற்றுண்டி வாங்க சென்றுள்ளார்.
மொத்த பில் தொகை ரூ.245 ஆகும். ஆனால், பணமாக கையில் இல்லாததால், ஷரோன், டெபிட் கார்டை கேஷியர் வினோத்திடம் கொடுத்துள்ளார். டெபிட் கார்டுக்கு சேவை வரியாக, 4 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று வினோத் கூறியதற்கு, ஷெரோன் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், டெபிட்கார்ட் மூலம், வினோத் வசூலித்த பணம் ரூ.315 என்று கூறப்படுகிறது. இவ்வளவு அதிகமாக பணம் எடுக்க தேவையில்லையே என்று கூறி ஷெரோன், கேஷியரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், வினோத், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து, ஷரோனை பெண் என்றும் பாராமல் முகத்தில் குத்தி, பிடித்து தள்ளியுள்ளார்.
இதை பார்த்த பிற வாடிக்கையாளர்கள் ஓடிவந்து, இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். வாடிக்கையாளர்களில் ஒருவர் பானசவாடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கேஷியர் மற்றும் ஷரோனை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
ஷரோன் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது, இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 354ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெண்ணின் மீதான தாக்குதல், மாண்பை குலைத்தல் போன்ற சட்டப் பிரிவின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களில் சிலர் சாட்சியம் சொல்ல முன்வந்துள்ளனர்.
இதனிடையே, வினோத் அளித்த வாக்குமூலத்தில், டெபிட் கார்டை, ஒன்றுக்கு, 4முறை ஸ்வைப் செய்ததாகவும், அதனால்தான் ஷரோன் தகராறை ஆரம்பித்ததாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications