For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் அரிய நரம்பியல் நோய் - மருத்துவ உலகம் கூறுவதென்ன?

By BBC News தமிழ்
|
தடுப்பூசி
Getty Images
தடுப்பூசி

கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு அரிதான நரம்பியல் நோய் ஏற்படலாம், ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதன் அபாயம் அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது.

ஒட்டுமொத்த உடல்நலனிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே அதிக பாதுகாப்பை வழங்குவதாக, பிரிட்டனின் இந்த ஆய்வு மீண்டும் உறுதி செய்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசியோடு தொடர்புடைய அரிதான எதிர்வினைகள் ஏதேனும் உள்ளதா? என இங்கிலாந்தின் 32 மில்லியன் பெரியவர்களின் தேசிய சுகாதார சேவையின் தரவுகளை ஆய்வாளர்கள் பரிசோதித்துப் பார்த்தனர். இந்த ஆய்வு 'நேச்சர் மெடிசின்'-ல் பிரசுரமாகியுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு ஒரு மாதத்துக்குப் பிறகு மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு ஒருவரின் நரம்பு மண்டலம் எப்படி செயல்படுகிறது என ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.

அப்போது தான் ஜிபிஎஸ் எனப்படும் Guillain-Barre Syndrome என்கிற அரிய வகை நோயைக் கண்டனர். இது தொற்று நோய்கள் மற்றும் சில தடுப்பூசிகளோடு தொடர்புடையது.

இந்த ஜிபிஎஸ் நோயால் நரம்பு மண்டலத்தில் அழற்சி ஏற்படும், இதனால் கை, கால், உடல் பகுதிகளில் உணர்வற்ற நிலை, பலவீனம், வலி ஆகியவை ஏற்படும். மெல்ல இவை மார்பு மற்றும் முகத்துக்கு பரவும்.

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க முடியும், பெரும்பாலானோர் இதிலிருந்து முழுமையாக தேறிவிடுவர், ஆனால் சிலருக்கு இது தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம், உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம்.

முதல் டோஸ் செலுத்திக் கொண்ட பின்:

ஆஸ்ட்ராஸெனீகா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில், ஒவ்வொரு 10 மில்லியன் பெரியவர்களுக்கும் 38 பேர் கூடுதலாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இது அடிப்படை எண்ணிக்கை உடன் ஒப்பிடும்போதான கணக்கு).

ஃபைசர் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில், ஒவ்வொரு 10 மில்லியன் பெரியவர்களில் 60 பேர் கூடுதலாக ரத்தக்கசிவு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு:

கொரோனா பாசிட்டிவ் ஆன 10 மில்லியன் பேரில் 145 பேர் கூடுதலாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டனர்

10 மில்லியன் பேரில் 123 பேர் மூளை அழற்சி பிரச்னைகளை எதிர்கொண்டனர்.

10 மில்லியன் பேரில் நோயெதிர்ப்பு மண்டலம், நரம்பு மற்றும் தசைகளை பாதிக்கும் மயஸ்தேனியா நோயால் 163 பேர் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாசிட்டிவான அடுத்த 7 நாட்களில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது, ஆனால் அடுத்த ஒரு மாத காலத்தில் அந்த அபாய அளவு மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வை ஸ்காட்லாந்தில் குறைவான மக்கள் தொகை கொண்ட தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவர்கள் மத்தியில் மீண்டும் செய்தனர். அப்போதும் ஆஸ்ட்ராஸெனீகா தடுப்பூசி மற்றும் ஜிபிஎஸ் நோயுடனான இணைப்பைக் கண்டுபிடித்தனர். ஆனால் ஃபைசர் தடுப்பூசியில் அதே போன்ற பாதிப்புகளைக் காணவில்லை.

இது போன்ற தொடர்புகள் ஏன் உண்டாகிறது என தெளிவாகத் தெரியவில்லை என்கின்றனர். மேலும் இது தொடர்பான ஆராய்ச்சிகள் தேவை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ரேச்சல் ஸ்க்ரேர், பிபிசி சுகாதாரம் சார்ந்த தவறான செய்திகளை சரிபார்க்கும் செய்தியாளர்

கொரோனா தடுப்பூசிகள் எல்லா வகையான அச்சுறுத்தும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்கிற பொய்யான செய்திகளைக் கூறும் பதிவுகளை, நீங்கள் நீண்ட நேரம் இணையத்தில் கண்டு உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டியதில்லை.

அது போன்ற பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகள், பல பாதுகாப்பு கண்காணிப்பு தரவுத் தளங்களிலிருந்து தவறான கோணத்தில் எடுக்கப்படுகின்றன. அது போன்ற வலைதளங்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்ட வாரங்களில் மக்கள் அனுபவிக்கும் உடல் நிலைமைகளை பதிவு செய்கிறது.

அவர்களே உருவாக்கிய பதிவுகளில், அது போன்ற உடல் உபாதைகள் கொரோனா தடுப்பூசி காரணமாக ஏற்பட்டதா என்பதை குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் அல்லது செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, எந்த வாரத்திலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு உடல்நல சிக்கல்கள் ஏற்படலாம்.

ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையில் எதிர்பார்ப்பதை விட ஒரு சிக்கல் அடிக்கடி ஏற்பட்டால் மட்டுமே எச்சரிக்கை சமிக்ஞை கொடுக்கப்படும்.

ஆகையால் தான், மில்லியன் கணக்கிலான மக்களின் தேசிய பொதுசுகாதாரப் பதிவுகளைப் பார்க்கும் தரவுகளின் பெரிய ஆய்வுகள் நமக்குத் தேவை.

இந்த சமீபத்திய ஆய்வு ஒரு விஷயத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. கொரோனா தடுப்பூசிகளால் நரம்பியல் சிக்கல்கள் ஏற்படுவது அரிதானவை மற்றும் எளிதில் சாத்தியமற்றவை என அது அறிவுறுத்துகிறது.

ஆனால், கொரோனா வைரஸ்தொற்று ஏற்படுவது, உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது, ஆகையால் தான் மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பாதுகாப்பு

கொரோனா வைரஸ்
Getty Images
கொரோனா வைரஸ்

"இதிலிருந்து கிடைக்கும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், இது போன்ற அரிதான நரம்பியல் நோய்கள் தடுப்பூசியுடன் தொடர்புடையதாக இருக்கலாம்" என ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜூலியா ஹிப்பிஸ்லி காக்ஸ் கூறினார்.

"ஆனால் தீவிர நோய்க்கு எதிராக, தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பெரிய அளவில் சான்றுகள் உள்ளன."

"நானும் ஒரு பொது மருத்துவராக பணிபுரிகிறேன், நாங்கள் மக்கள் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ்கள் செலுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த விரும்புகிறோம், அதைச் செய்வதன் மூலம் தேசத்தின் ஆரோக்கியத்தை எங்களால் முடிந்தவரை சிறந்த முறையில் பாதுகாப்போம்."

இந்த ஆய்வு, கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு, ஒரு சிறிய அளவிலான ஆபத்து அதிகரிப்பைக் காட்டியது என ஒப்புக்கொள்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் ஓபன்ஷா.

"ஜிபிஎஸ், மயஸ்தேனியா, ரத்தக்கசிவு, மூளை அழற்சி பெல்ஸ் வாதம் ஆகிய நோய்கள், கொரோனாவால் பாதிக்கபட்ட முதல் இரு வாரங்களில் மிகவும் பொதுவானவை."

இரண்டாவது தடுப்பூசி டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ்களைக் கருத்தில் கொண்டு தங்கள் ஆய்வை விரிவுபடுத்த ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
neurological problems due to Coronavirus. Coronavirus side effects in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X