அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் கட்டாய கல்யாணம்
பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் தன் மகளுக்கு தாலி கட்ட வைத்துள்ளார் செங்கல் சூளை அதிபர். வேலை உள்ள இளைஞர்களை கடத்தி கட்டாய கல்யாணம் செய்யும் சம்பவங்கள் பீகாரில் அடிக்கடி நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் நிறைய ஆண்கள் பெண் கிடைக்காமல் கடும் வேதனையில் இருக்கிறார்கள். குறிப்பாக 90களில் பிறந்தவர்கள் அதாவது 1986 முதல் 1995 வரை பிறந்த பலருக்கும் திருமணம் ஆகவில்லை.. 40 வயது நெருங்கும் நிலையில் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் பல சாதிகளில் சிக்கலான நிலை இருக்கிறது. இதனால் உட்பிரிவுகள் கூட பார்க்காமல் ஒரே சாதி என்றால் போதும் என்றும் தேடி பார்க்கிறார்கள். கவுண்டர், செட்டியார் பிராமணர், வன்னியர் உள்பட பல சாதிகளிலும் பெண்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை கட்டுப்பாடு தான். தமிழகத்தில் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வது இல்லை. இதனால் ஆண் பெண் இடைவெளி அதிகமாக உள்ளது. அதேநேரம் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் இளைஞருக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு வேலையில் இருக்க வேண்டும். அல்லது ஐடி நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். சொந்த தொழில் என்றால் பெரிய அளவில் வருமானம் ஈட்டி கார், பங்களா என வைத்திருப்பவராக இருக்க வேண்டும் என பல எதிர்பார்ப்பு உள்ளது. கடன் இருக்கக்கூடாது என பெரிய லிஸ்டே உள்ளது. இதுதான் தமிழகத்தில் எதார்த்தமான நிலையாக உள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் அரசு வேலை கிடைத்த இளைஞரை 24 மணி நேரத்தில் கடத்தி துப்பாக்கி முனையில் திருமணத்தை நடத்தி உள்ளார் செங்கல் சூளை அதிபர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டதைச் சேர்ந்தவர் கௌதம் குமார். இவர் பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இவருக்கு படேபூரின் ரெபுராவில் உள்ள உத்கிராமித் மத்திய வித்யாலயா பள்ளியில் பணி வழங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கௌதம் குமாருக்கு அரசு வேலை கிடைத்த 24 மணி நேரத்தில், பள்ளிக்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் என்பவரின் ஆட்கள் தான் கௌதம் குமாரை துப்பாக்கி முனையில் கடத்திக் கொண்டு சென்றனர். செங்கல் சூளை அதிபரான ராஜேஷ் ராய் துப்பாக்கி முனையில் வைத்து, தனது மகள் சாந்தினிக்கு தாலி கட்டுமாறு ஆசிரியர் கௌதம் குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். அவரும் பயந்து போய் தாலி கட்டினார்.
இந்த சம்பவம் குறித்து பீகார் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கௌதம் குமார் போல் பீகாரில் அடிக்கடி இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள், அரசு வேலையில் உள்ளவர்கள் தான் இப்படி கடத்தப்படுகிறார்கள். பீகாரில் 'பகத்வா விவா' (மணமகன் கடத்தல் ) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அண்மையில் பீகாரின் பெகுசரையில். கால்நடை மருத்துவரை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள் பீகாரில் அடிக்கடி நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications