மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 19% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு.. ஆய்வறிக்கையில் திடுக் தகவல்
டெல்லி: நாடு முழுவதும் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர்களில், 19% வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சுமார் 1,500 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் இத்தகலை வெளியிட்டுள்ளது

இந்த 1,500 வேட்பாளர்களில் 13% வேட்பாளர்கள் அதாவது 1,070 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் உட்பட பல்வேறு அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ள அதிர்ச்சி தகவலையும் Association for Democratic Reforms அமைப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல்களில், 56 வேட்பாளர்கள் மீது இதர கிரிமினல் வழக்குகளும், 55 பேர் மீது கொலை வழக்கும், 184 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 வேட்பாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு உட்பட 126 வேட்பாளர்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் 47 வேட்பாளர்கள் மீது கடத்தல் வழக்குகளும், 95 வேட்பாளர்கள் மீது வெறுப்பு அரசியல் பிரசாரங்களில் ஈடுபட்டது தொடர்பான வழக்குகளும் உள்ளன.
இந்த ஆய்வறிக்கையில் குற்ற வழக்குகள் கொண்ட கட்சி ரீதியான வேட்பாளர்களின் சதவீதமும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 433 பாஜக வேட்பாளர்களில் 29% அதாவது 124 பேர் மீதும், 419 காங்கிரஸ் வேட்பாளர்களில் 26% அதாவது 107 வேட்பாளர்கள் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியின் 16% அதாவது 381 வேட்பாளர்களில் 61 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்வேட்பாளர்களில் 58% 69 பேரில் 40 பேர் மீது அதிதீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தை பொறுத்த வரை 13 % வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள மக்களவைத் தொகுதிகளில் 265 தொகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகவும் ஏடிஆர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications