முகலாயர்களையே தடுத்து நிறுத்திய கல்யாண் நகருக்குள் ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவிய ஆச்சர்யம்!
மும்பை : மும்பைக்கு அருகே உள்ள ஒரு சிறிய நகரம்தான் கல்யாண். பரபரப்பு இல்லாத அந்த நகரம் இன்று நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பி்ர்லா மந்திர், கலா தாலோ, கணேஷ் காட் போன்ற இடங்களுக்குப் பிரபலமான கல்யாண், இன்று ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயருக்காக ஊடகங்களில் அடிபட்டு வருகிறது.
இந்த பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து மனம் திருந்தி நாடு திரும்ப முடிவு செய்து, அதில் அரீப் என்கிற அரீப் மஜீத் மட்டும் திரும்பியுள்ளார். அவரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகலாயர்களையே தடுத்து நிறுத்தி அரண் போல விளங்கிய நகரம் கல்யாண். ஆனால் இன்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்த நகருக்குள் ஊடுருவியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிவான்டி தொடர்பு:
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு எப்படி ஆட்களைத் தேர்வு செய்கிறது என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதற்கு மஜீத் கொடுத்துள்ள தகவல்கள் பெரும் உதவியாக உள்ளன. கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட இணையதளங்களை தேடி தான் ஐஎஸ்ஐஎஸ் குறித்து முழுமையாக அறிந்து கொண்டதாக மஜீத் கூறியுள்ளார்.
இவை அனைத்தும் ஐஎஸ் அமைப்பு உருவாக்கிய இணையதளங்கள் ஆகும். இந்த இணையதளங்களில் ஐஎஸ் அமைப்பில் எப்படி சேரலாம் என்ற விவரங்களும் கூட கிடைக்கின்றன. மேலும் இந்த இணையதளங்கள் இளைஞர்களை மூளைச் சலவை செய்கின்றன. இருப்பினும் மகாராஷ்டிராவின் பிவான்டி என்ற நகரில்தான் ஆளெடுக்கும் ஏஜென்டுகள் அதிகம் இருப்பதாக என்ஐஏ கருதுகிறது.
பிவான்டியைச் சேர்ந்த 3 பேரைத்தான் மஜீத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளார். இந்த ஏஜென்டுகள்தான் மஜீத் உள்ளிட்டோரை ஈராக்கின் கர்பலாவுக்கு புனிதப் பயணமாக அழைத்துச் சென்று பின்னர் தீவிரவாத அமைப்பில் சேர்த்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த மூன்று பேரும் பிவான்டியில் செயல்பட்டு வந்துள்ளனர். இந்தியாவிலிருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய விரும்புவோரை இவர்கள்தான் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் வேலையைச் செய்து வந்துள்ளனர்.
இவர்கள் தெற்கு மும்பையில் உள்ள டோங்கிரி என்ற இடத்திற்கு அனுப்பி அங்குள்ள ஒரு சுற்றுலா ஏஜென்ட் மூலம் போலியான ஆவணங்களைக் கொடுத்து நால்வரையும் ஈராக் அனுப்பி வைத்துள்ளனர்.
அன்சார் உல் தவாஹித் :
இந்தியாவில் அன்சார் உல் தவாஹித் என்ற பெயரில் செயல்படுகிறதாம் ஐஎஸ்ஐஎஸ். இந்த அமைப்புக்கு முன்னாள் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புத் தீவிரவாதி சுல்தான் அகமது அர்மார் என்பவர்தான் தலைவராக உள்ளார். இவர் கர்நாடகா மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர். இவர் சவூதி அரேபியாவிலிருந்து செயல்படுவதாக கூறுகிறார்கள். இவரக்தான் இந்தியர்களுக்காகவே பல இணையதளங்களை உருவாக்கியுள்ளாராம். அர்மாருக்கு ஐஎஸ் தவிர தெஹ்ரிக் இ தலிபன் அமைப்புடனும் தொடர்பு உள்ளது.அல் கொய்தாவுக்குப் போட்டியாக துணைக் கண்டத்தில் இது செயல்படுகிறது. சிமி, வங்கதேசத்தின் ஜமாத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளும் இதனுடன் கை கோர்த்துள்ளன.
அன்சார் இப்போதைக்கு ஆளெடுப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம். ஆனால் அவர்களது பெரிய திட்டமே, இந்தியாவிலும் ஒரு இஸ்லாமிய நாட்டை நிறுவுவது என்கிறார்கள்.
விசா மோசடி :
மஜீத்துக்கு புனிதப் பயணம் என்ற பெயரில் விசா எடுத்துள்ளனர். ஆனால் கர்பலாவுக்குப் போன பின்னர் ஐஎஸ் அமைப்புக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். எனவே புனிதப் பயணம் என்ற பெயரில் மோசடியாக விசா எடுத்து ஆட்களை அனுப்புகிறார்கள். இன்னொரு பக்கம், ஹாஜா பக்ருதீன் என்பவரை தமிழகத்திலிருந்து தேர்வு செய்து சிங்கப்பூரில் வேலை பெர்மிட் வாங்கித் தந்து அங்கு அனுப்பி பின்னர் சிரியாவுக்கு அனுப்பியுள்ளனர்.
ஆன்லைனில்: ஆன்லைன் மூலமாகத்தான் பெரும்பாலும் ஆளெடுப்பு, மூளைச் சலவை நடைபெறுவதால் அது உளவு அமைப்புகளுக்கு பெரும் சவாலாக மா்றியுள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை 3000 இணயைதளங்கள் உருவாகிறதாம். பின்னர் அவை காணாமல் போய்கின்றன. இப்படிச் செய்வதால் உளவு அமைப்புகளால் யாரையும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட கண்ணாமூச்சி விளையாட்டு போல நடத்துகிறார்கள்.
இந்தியாவில் வெறும் 6 ஏஜென்டுகளை மட்டும் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 20,000 இணையதளங்கள் மூலம் ஆளெடுக்கிறதாம் ஐஎஸ் அமைப்பு.
வஹாபி :
இந்தப் பிரச்சினை 2013ம் ஆண்டே தொடங்கி விட்டது. சவூதி அரேபியாவிலிருந்து ஏராளமான வஹாபி அறிஞர்கள் அப்போது இந்தியாவுக்கு வருகை தந்தனர். அவர்களில் பலர் மகாராஷ்டிராவில் நடந்த முகாமில் கலந்து கொண்டனர் இந்த முகாம்களுக்கு நாடு முழுவதுமிருந்து 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இவர்களில் 25,000 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் போதனை பல இளைஞர்களை ஈர்த்தது.
ஷரியா சட்டத்தின் முக்கியம் குறித்து இவரக்ள் பேசியது பலரை மனம் மாறவைத்தது. இவர்களால்தான் பலர் ஐஎஸ் அமைப்பின் பால் ஈர்க்கப் பட்டனர். எனவே அப்போதே நமக்குப் பிரச்சினை ஆரம்பாகி விட்டதாக உளவுத்துறையினர் கூறுகிறார்கள்.
உலக ராணுவம் :
மஜீத் அளித்த வாக்குமூலத்தை ஏற்கனவே ஒன்இந்தியா கூறி விட்டது. தொடர் விசாரணையில், எப்படியெல்லாம் ஐஎஸ் ஆட்களை இழுக்கிறது என்பது குறித்து தெரிய வந்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் இருந்து ஆட்களைத் திரட்டி உலகளாவிய ராணுவத்தை உருவாக்கி இருக்கிறது ஐஎஸ் என்பதும் தெளிவாகியுள்ளது.