வடகிழக்கு மாநிலங்களில் பாஜக வெற்றி எப்படி இருக்கிறது?... இன்று தெரியும் ரிசல்ட்!
வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் வெற்றி எப்படி இருக்கிறது என்று இன்றைய வாக்கு எண்ணிக்கை தெளிவுபடுத்தும்.
Recommended Video

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் கை ஓங்கியுள்ளதா என்பதை இன்று நடைபெறும் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெளிவுபடுத்தும்.
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் பலம் கூடி இருக்கிறது. இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 19 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது.
அண்மைக்காலமாக வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி கைப்பற்றியது.

தேசியவாத காங். ஆட்சியை பிடிக்கலாம்
தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள நாகாலாந்து, மேகாலயா, திரிபுராவில் பா.ஜனதாவும் அதன் கூட்டணியும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் பா.ஜனதாவுடன் போட்டி நிலவுகிறது. எனினும் தேசியவாத காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

மார்க்சிஸ்ட் பாஜக இடையே போட்டி
திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இம்முறை பா.ஜனதா கடும் சவாலாக திகழ்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் திரிபுராவில் பாஜக தனது கூட்டணி கட்சியான ஐபிஎஃப்டியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றும் என்று கணித்துள்ளன. ஆனால் ஒரு சில கருத்துக்கணிப்புகள் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆட்சியை தக்க வைக்கும் என்றும் கூறுகின்றன.

நாகாலாந்து யார் யாருக்கு இடையே போட்டி?
நாகாலாந்தில் ஆளும் நாகா மக்கள் முன்னணிக்கும், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைமையில் அமைந்த பா.ஜனதா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. 1963-ம் ஆண்டு முதல் இந்த மாநிலத்தில் 3 முதல்வர்களை தந்த காங்கிரஸ் வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

11 மணிக்குள் தெரிந்து விடும்
விரைவில் கர்நாடகா சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று நடைபெறும் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையானது தொடங்குகிறது 3 மாநில சட்டசபை தொகுதிகளும் குறைவான வாக்காளர்களை கொண்டவை என்பதால் பகல் 11 மணிக்கு உள்ளாகவே இறுதி நிலவரம் தெரிய வந்துவிடும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications