பீஸ் கட்டாததால் அவமானப்படுத்தப்பட்ட மாணவர் தற்கொலை... வீடியோவில் வாக்குமூலம்!
ஹைதராபாத்: பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் அவமானப்படுத்தப்பட்ட பள்ளி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் காரீம்நகர் மாவட்டத்தில் பெட்டபள்ளியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவர் சதீஷ். சம்பவத்தன்று பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என சதீஷ் நிர்வாகத்தால் அவமானப்படுத்தப் பட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த சதீஷ் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்தவர், தனது உறவினரின் செல்போனை வாங்கி அதில் நடந்த சம்பவங்களைப் பேசி வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதமாகவும் எழுதி டிவிக்கு அருகில் வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார்.
மாலை வழக்கம் போல் பள்ளி திரும்பாததால், மாணவரைக் காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சதீஷின் உடல் அவரது குடியிருப்பில் இருந்து 20 கிமீ தொலைவில் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து சதீஷின் வாக்குமூலம் பதிவான வீடியோவையும், கடைசிக் கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் தனக்கு நேர்ந்த அவமானங்களை சதீஷ் விரிவாகத் தெரிவித்துள்ளார்.
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தன்னிடம் ஏற்கனவே பள்ளி நிர்வாகம் ரூ. 5 ஆயிரம் கட்டணம் வசூலித்துள்ளதாகவும், தொடர்ந்து இன்னும் பணம் கேட்டு அவமானப் படுத்துவதாகவும் அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications