14 வயது சிறுமி பலாத்காரம்.. குஜராத்தில் கொந்தளிப்பு.. உ.பி, பீகார் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர்
அகமதாபாத்: குஜராத்தின் வட பகுதியில் 14 வயது சிறுமியை பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான உ.பி, பீகார் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்தது. அகமதாபாத்திலிருந்து 116 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சபர்கந்தா. அங்கு ஒரு 14 வயது சிறுமியை பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக காந்தி நகர், அகமதாபாத், பதான், சபர்கந்தா, மேசானா ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர். தாக்குதலைத் தொடர்ந்து வட மாநிலத் தொழிலாளர்கள் வெளியேறி வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கூர் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் தாக்குதலில் ஈடுபடுவதாக தெரிகிறது. இந்த அமைப்பின் தலைவரான காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாக்கூர், தாக்கூர் இனத்தவர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.