அன்னா ஹசாரே பெயரை தேர்தலில் பயன்படுத்தவேமாட்டோம்: அர்விந்த் கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் அன்னா ஹசாரே பெயரை பயன்படுத்தவே மாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் ஆட்சி அமைத்தால் அன்னா ஹசாரேயின் வலுவான லோக்பாலை ராம் லீலா மைதானத்தில் சட்டசபையை கூட்டி நிறைவேற்றுவோம் என்று அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
தமது பெயரை டெல்லி சட்டசபை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று அன்னா ஹசாரே கூறியதுடன் தமது பெயரில் நிதி வசூலிக்கப்பட்டதாகவும் லோக்பால் மசோதா நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்நிலையில் லோக்பால் மசோதா நிதி ரூ3 கோடியை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக விமர்சிக்கும் அன்னா ஹசாரேயின் வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கெஜ்ரிவால், ஹசாரேயின் பேச்சு மிகவும் புண்படுத்திவிட்டது. லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதற்காகத்தான் அன்னா ஹசாரேயின் பெயரை பயன்படுத்தினோம். இனிமேல் அவரது பெயரை பயன்படுத்தமாட்டோம்.
நாங்கள் ராபர் வதேரா, முகேஷ் அம்பானி, நிதின் கத்காரி ஆகியோரின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினோம். இப்போது அனைவரும் ஒன்றிணைந்துவிட்டனர். காங்கிரஸ்- பாஜக இணைந்து எங்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகிறது. நாங்கள் நிதி முறைகேடு செய்தது நிரூபிக்கப்பட்டால் டெல்லி தேர்தலிலேயே நாங்கள் போட்டியிடவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications