தொடர்கிறது ரோஜா மீதான ஓராண்டு தடை...!
ஹைதராபாத்: ஒஎஸ்ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இதனால் ரோஜா சட்டசபைக்குள் நுழைய ஒரு ஆண்டு விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜா, கடந்த ஆண்டு ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களை அவதூறாக பேசினார். இதனால் சபாநாயகர் சிவபிரசாத் ராவ் அவரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்தார்.
இதை எதிர்த்து ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் ரோஜா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதி சபாநாயகர் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து ரோஜா சட்டசபை செல்ல அனுமதி வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டமன்ற செயலாளர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தார். சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நுழைய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திலீப்டீபோஸ்லே, நவீன் ராவ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், கீழ் கோர்ட்டு உத்தரவை தள்ளுபடி செய்தது. சட்டசபை உரிமை மீறல் குழுவின் பரிந்துரையை அமுல்படுத்த உத்தரவிட்டார்.
இதனால், ஆந்திர சட்டசபைக்குள் ஓராண்டு நுழைய விதிக்கப்பட்ட ரோஜாவின் சஸ்பெண்டு நீடிக்கிறது.