வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டி: கேஜ்ரிவால் அறிவிப்பு
வாரணாசி: லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தாம் தயாராக இருக்கிறேன் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
வாரணாசியில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களிடையே கேஜ்ரிவால் பேசியதாவது:

காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் ஒரே மாதிரியான கொள்கைகளைக் கொண்டவை. நான் எம்.பியாக செல்லத்தான் வேண்டுமெனில் ஒரு பாதுகாப்பான தொகுதியைத் தேர்ந்தெடுத்திருப்பேன்.
நான் செல்லுமிடங்களில் காங்கிரஸை தோற்கடிக்கவே மக்கள் விரும்புகின்றனர். நரேந்திர மோடியை வளர்ச்சியின் நாயகனாக ஊடகங்களே சித்தரிக்கின்றன. மோடியை வளர்ச்சியின் அடையாளமாக காட்டி ஊடகங்கள் ஏமாற்றுகின்றன.
நீங்கள் மோடிக்கு வாக்களித்தால் உங்கள் நிலம் உங்களிடம் இருக்காது.. குஜராத்தில் அதானி குழுமத்திற்காக விவசாய நிலங்களை தாரைவார்த்துவிட்டார் மோடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
குஜராத்தில் மோடி ஆட்சிக்காலத்தில் அனைத்து விவசாய மானியங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்தியாவில் அன்னிய முதலீட்டை அனுமதித்து மோடி வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்திவிடுவார்.
மோடி ஆட்சிக்கு வந்தால் வால்மார்ட் வந்துவிடும். நமது நாட்டு சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். சிறுதொழில்களை நசுக்குவதில் காங்கிரஸ், பாஜக ஒரே மாதிரியாக சிந்திக்கின்றன.
நீங்கள் மோடிக்கு வாக்களித்தால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் 4 மடங்கு உயர்ந்துவிடும். மோடியும் ராகுலும் அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களின் ஏஜெண்டுகளாகவே செயல்படுகின்றனர்.
நாங்கள் முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்கு பதிவு செய்தால் காங், பாஜக கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்க்கின்றன. குஜராத்தில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் மோடி இத்தனை காலம் தொடர்ந்து வெல்வது குறித்து சந்தேகம் எழுகிறது.
நாட்டு மக்களே! காங்கிரஸ், பாஜகவின் அடிமைகளாகவே தொடர்ந்தும் இருக்கப் போகிறீர்களா? மோடி பிரதமரானால் ஊழல்வாதிகளான எதியூரப்பாவும் ஸ்ரீராமுலுவும் மத்தியில் அமைச்சராவர்கள்..
நாட்டின் பிரதமராவதற்காக ஊழல்வாதிகளை ஒருங்கிணைத்திருக்கிறார் மோடி. வாரணாசியில் மோடியையும் அமேதியில் ராகுலையும் தோற்கடிக்க வேண்டும்.
வாரணாசியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட நான் தயார். அவரது சவாலை நான் ஏற்க தயாராகவே இருக்கிறேன். குஜராத்தின் வளர்ச்சி குறித்து என்னுடன் விவாதம் நடத்த மோடி வரவேண்டும்.
இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.
ஒளிரப்பு செய்யாத டைம்ஸ் நவ்
வழக்கமாக அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியை லைவ்வாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இன்று ஒளிபரப்பவில்லை. அண்மையில் மோடிக்கு ஆதரவாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் அதன் அர்னாப் கோஸ்வாமியும் செயல்படுவதாக கேஜ்ரிவால் விமர்சித்து வந்ததால் இன்று அவரது வாரணாசி கூட்டத்தை ஒளிபரப்பவில்லை.












Click it and Unblock the Notifications