மோடியுடன் விவாதம்.. 100% நான் ரெடி.. ஆனால் அவர் வரமாட்டாரே.. சிரித்துக்கொண்டே கலாய்த்த ராகுல் காந்தி
லக்னோ: பிரதமர் மோடியுடன் பொது விவகாரங்களில் விவாதம் நடத்த 100 சதவிகிதம் நான் தயாராகவே இருக்கிறேன் என்று ராகுல் காந்தி லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசினார். ஆனால், மோடி விவாதத்திற்கு வரமாட்டார் எனவும் ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே கூறினார்.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல், 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்னும் 4 கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. 4 ஆம் கட்ட தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

4 ஆம் கட்ட தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. மத்தியில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 3 வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. 400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என பாஜக மூத்த தலைவர்கள் நாடு முழுக்க பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினர் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். 4 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய உள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி வருகிறார். பரம்பரை வரி விதித்து மக்கள் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய காங்கிரஸ் திட்டமிடுவதாக தனது தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக சாடினார். அதேபோல், காங்கிரஸ் கட்சி இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற நினைப்பதாகவும் சாடி வருகிறார்.
மோடியின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்து வருகிறது. மோடி தனது பிரசாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தியை இளவரசர் என்று கூறி காட்டமாக விமர்சித்து வருகிறார். ராகுல் காந்தியும் தனது தேர்தல் பிரசாரத்தில் மோடிக்கு பதிலடி கொடுத்து வருகிறார்.
இவ்வாறாக மோடிக்கும் ராகுல் காந்திக்கும் வார்த்தை யுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்கள் ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி பதிலளித்து வந்தார்.
குறிப்பாக மூத்த பத்திரிகையாளர் மற்றும் இரண்டு முன்னாள் நீதிபதிகள் எழுப்பிய ஒரு கேள்வியில், பிரதமர் மோடியும் நீங்களும் பொது விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி, "பொது விஷயங்களில் பிரதமர் மோடியுடன் எந்த ஒரு தளத்திலும் விவாதம் நடத்த 100 சதவிகிதம் நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியும்.. பிரதமர் மோடி 100 சதவிகிதம் என்னுடன் விவாதம் நடத்த தயாராக இல்லை" என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications