தெலுங்கானா: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் எல்லாம் பேசமாட்டேன்.. அடேங்கப்பா பிரதமர் மோடி அசத்தல்!
மகபூப் நகர்: அரசு நிகழ்ச்சிகளில் நான் அரசியல் பேசுவது இல்லை என தெலுங்கானாவில் ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தெரிவித்தார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தி ரூ13,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டங்களையும் தொடங்கி வைத்தும் பிரதமர் மோடி இன்று பேசினார்.

மகளிர் மசோதா: மகபூப்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் பல பகுதிகளில் திருவிழாக்கள் காலம் தொடங்கிவிட்டது. நவராத்திரி பண்டிகை தொடங்கும் முன்னரே நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி "சக்தி" தெய்வத்தை வணங்கக் கூடிய உணர்வுகளை உருவாக்கி வைத்துள்ளோம்.
ரூ13,500 கோடி திட்டங்கள்: தெலுங்கானாவில் ரூ13,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன; தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்து தெலுங்கானா மக்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். நாக்பூர்-விஜயவாடா வழித்தடத்தின் மூலம் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கான பயணம் எளிதாக அமையும். அத்துடன் இந்த 3 மாநிலங்களிலும் வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த வழித்தடத்தில் பல்வேறு பொருளாதார மையங்கள் உருவாகும். ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம், ஐந்து மெகா உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
மஞ்சள் வாரியம்: சர்வதேச அளவில் இந்தியாதான் மஞ்சளின் முக்கிய உற்பத்தி மையம். மஞ்சள் நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியாளரும் இந்தியாதான். தெலுங்கானா விவசாயிகள் மஞ்சளை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றனர். கொரோனா காலத்துக்குப் பின்னர் உலக அளவில் மஞ்சள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து, தேவையும் அதிகரித்துள்ளது. மஞ்சள் விவசாயிகளின் அவசியத்தையும் எதிர்கால வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு, தேசிய மஞ்சள் வாரியத்தை தெலுங்கானாவில் நிறுவ இருக்கிறோம்.
அரசியல் பேசமாட்டேன்: தெலுங்கானாவில் முலுகுவில் பழங்குடிகள் பலகலைக் கழகம் நிறுவப்படும். இந்த பல்கலைக் கழகத்துக்கு சம்மக்கா-சாரக்கா பெயர் சூட்டப்படும். ரூ. 900 கோடி நிதி ஒதுக்கீட்டில் இப்பல்கலைக் கழகம் அமையும். தற்போது அரசு விழாவில் இருக்கிறேன். அதனால் நான் கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெளியே சென்று பேசுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications