ரஜினி கூடயா.. அதற்கெல்லாம் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் பாஸ்.. இர்பான் கான்
மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மோதுவது குறித்தெல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன். ரஜினி படம் வெளியாகும் அதே நாளில் எனது படமும் வெளியாகிறதே என்பதே எனக்குப் பெருமையானது. அவருடன் மோதுவதற்கெல்லாம் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இர்பான் கான்.
கபாலி உலகெங்கும் வெளியாகும் அதே நாளில்தான் இர்பான் கான் நடித்துள்ள மதாரி படமும் மும்பையில் வெளியாகிறது. இந்த இரண்டு படத்துக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனாலும் இந்தப் படத்தை கோர்த்து விட்டு விட்டனர். காரணம், மதாரி படத்தின் போஸ்டரைப் போலவே, கபாலி படத்தின் போஸ்டர் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியதுதான்.

மதாரி பட போஸ்டரை கபாலி குழு காப்பி அடித்து விட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது. ஆனால் உடனடியாக இர்பான் கான் விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் கபாலி படம் வெளியாகும் அதே நாளில் மதாரியும் வெளியாவதால் இது ரஜினிக்குப் போட்டியா என்று இர்பான் கானிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார். எனக்கும், அவருக்கும் எப்படி போட்டி இருக்க முடியும். அப்படியெல்லாம் போட்டியிட வேண்டுமானால் இந்த பிறவி முடிந்து அடுத்து ஒரு பிறவி எடுத்து வர வேண்டும்.
இது நிச்சயம் மோதல் இல்லை. அவர் மிகப் பெரியவர். ஒரு பெரிய நடிகராக உலகெங்கும் கோடிக்கணக்கில் ரசிகர்களைச் சேர்த்து வைத்திருப்பவர். அவருக்கு நான் சமமாக முடியாது. எனது படம் அவரது படத்துடன் சேர்ந்து வருகிறது என்பதே பெரிய விஷயம், அதிர்ஷ்டமாகும் என்று கூறியுள்ளார் இர்பான் கான்.












Click it and Unblock the Notifications