காங்கிரஸ் சதியால் தான் சிறையிலிருந்தேன்.. பெண் சாமியார் சாத்வி பிரக்யா பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே தான் சிறையில் அடைக்கப்பட்டதாக பெண் சாமியார் சாத்வி பிரக்யா தெரிவித்துள்ளார்.
மும்பை: காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே தான் சிறையில் அடைக்கப்பட்டதாக மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யா குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மலேகான் என்ற இடத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு இரட்டை வெடிகுண்டு தாக்கல் நடத்தப்பட்டது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரித்தது. இதில் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித், பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் கடந்த 2011-இல் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வந்த நிலையில் சாத்வி பிரக்யா உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டை என்ஐஏ கைவிட்டது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
தன் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டதை அடுத்து தனக்கு ஜாமீன் வழங்க மும்பை நீதிமன்றத்தில் சாத்வி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம் சாத்வி பிரக்யாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று சிறையிலிருந்து வெளிவந்த அவர், காங்கிரஸ் கட்சியின் சதி காரணமாகவே நான் சிறையிலடைக்கப்பட்டேன். 9 ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டேன் என பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications