எனக்கும் ராம் ரஹீமுக்கும் இடையே "அந்த" மாதிரியான உறவு இல்லை... ஹனிபிரீத் மறுப்பு
எனக்கும் ராம் ரஹீமுக்கும் இடையே எந்த விதமான தவறான உறவுகளும் இல்லை என்று அவரது வளர்ப்பு மகள் என்று கூறப்படும் ஹனிபிரீத் இன்சான் தெரிவித்தார்.
Recommended Video
டெல்லி: எனக்கும், ராம் ரஹீமுக்கும் இடையே எந்த விதமான தவறான உறவுகளும் இல்லை. எல்லாரும் இவ்வாறு கூறுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று ஹனிபிரீத் இன்சான் தெரிவித்தார்.
தேரா சச்சா சவுதா என்ற இயக்கத்தின் தலைவராக உள்ளவர் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் ஆவார். இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு ஹரியாணா மாநிலத்தில் சிர்சா நகரில் ஆசிரமத்தை தொடங்கினார். இங்கு கடந்த 2002-ஆம் ஆண்டு இரு பெண் சீடர்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றம் உறுதியான நிலையில் ஹரியாணாவில் நடந்த வன்முறையில் 38 பேர் உயிரிழந்தனர்.மேலும் 200 பேர் காயமடைந்தனர். ராம் ரஹீமுடன் நிழலாக உள்ள அவரது தத்து மகள் எனக் கூறப்படும் ஹனி பிரீத்துக்கு இந்த வன்முறையில் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டது.
36 நாள்கள் தலைமறைவு
இதனால் அவரை விசாரிக்க போலீஸார் வரவுள்ளதை அறிந்த ஹனிபிரீத் தலைமறைவானார். அவர் நேபாளத்துக்கு தப்பிவிடலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முன் ஜாமீன் கோரிய அவருடைய மனுவையும் டெல்லி கோர்ட்டு நிராகரித்தது. இந்நிலையில் 36 நாள்கள் தலைமறைவாக உள்ள ஹனிபிரீத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
தத்து மகள் அல்ல
இதனிடையே ஹனிபிரீத்துக்கும், ராம் ரஹீமுக்கும் இடையே தவறான உறவு உள்ளதாகவும் அதை தான் கண்ணால் பார்த்ததாகவும் அவரது முன்னாள் கணவர்
விஸ்வாஸ் குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஹனிபிரீத்தை தத்தெடுத்ததாக கூறப்படுவது எல்லாம் கண்துடைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். 36 நாள்கள் கழித்து இந்தியா டுடேவுக்கு ஹனிபிரீத் பேட்டி அளித்தார்.
தவறான உறவு இல்லை
இதுகுறித்து ஹனி பிரீத் கூறுகையில் எனக்கும் ராம் ரஹீமுக்கும் இடையே தவறான உறவு இல்லை. தந்தை என்ற முறையில் அவருக்கு என் மீது அன்பு உள்ளது. தந்தை என்ற முறையில் என் மீது கை போட அவருக்கு உரிமை உள்ளது. எங்களது உறவு மிகவும் புனிதமானது. என்னுடைய மொத்த கவலையும் மீடியாக்கள் என்னை இவ்வளவு முன்னிலைப்படுத்துவதுதான். பொய்யான தகவல்களை வெளியிடுவதுதான்.
ஆதாரம் உள்ளதா
தந்தையுடன் மகள் அனுமதி பெறாமல் நீதிமன்றத்துக்குச் சென்றார் என்பது சாத்தியமற்றது. என்னிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. நான் கலவரத்தில் ஈடுபட்டதாக அவர்கள் கூறுகின்றனர். எனக்கு எதிராக ஏதாவது ஆதாரம் அவர்களிடம் உள்ளதா? நான் அப்பாவி. கலவரம் நடந்தபோது என்னை எங்காவது பார்த்தீர்களா. அங்கு நான் இல்லவே இல்லை. அவ்வாறிருக்கையில் நான் எப்படி வன்முறையை நடத்தியிருக்க முடியும். எனக்கும், என்னுடைய தந்தைக்கும்
நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது, நிச்சயமாக எங்களுக்கு நீதி கிடைக்கும்.
அவர் குறித்து பேச விரும்பவில்லை
என்னுடைய முன்னாள் கணவர் என்று கூறி கொள்ளும் விஸ்வாஸ் குப்தா யார். அவர் ஒன்றும் அந்தளவுக்கு முக்கியமானவர் அல்ல. அவர் குறித்து பேச விரும்பவில்லை. நான் இப்போது முழுமையாக மன உளைச்சலில் உள்ளேன். எனக்கு சட்ட நடைமுறைகள் எதுவும் தெரியாது. அதனால்தான் தலைமறைவாக உள்ளேன். என்னை துரோகி என்கிறார்கள். எனது தந்தைக்கு பிறகு, நான் ஆதரவற்றவளாகிவிட்டேன். பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றங்களுக்கு நிச்சயம் செல்வேன். ஆனால் எனது மனஉளைச்சலில் இருந்து வெளியே வர சிறிது காலம் பிடிக்கும் என்றார் ஹனிபிரீத்.