ஷீனா கொலை பற்றிய எல்லா உண்மையையும் சொல்கிறேன் யுவர் ஆனர்: கோர்ட்டில் டிரைவர் மனு
மும்பை: நீதிமன்றத்தில் ஷீனா போரா கொலை குறித்த முழு உண்மையையும் தெரிவிக்க விரும்புவதாக இந்திராணி முகர்ஜியின் முன்னாள் டிரைவர் ராய் தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை மகாராஷ்டிரா அரசு சிபிஐக்கு மாற்றிவிட்டது. இந்நிலையில் இந்திராணி உள்பட 3 பேரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவலை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே ஷீனா போராவின் கொலை குறித்த அனைத்து உண்மையையும் தெரிவிப்பதாக ராய் சிறை அதிகாரிகள் மூலம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த மனுவை அளித்துள்ளார். ஆனால் நேற்று தான் ஷீனா கொலை வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ராய் நீதிமன்றத்திடம் பேச விரும்புவதாக மனு அளித்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது என சஞ்சீவ் கன்னாவின் வழக்கறிஞர் ஷ்ரேயான்ஸ் மிதாரே தெரிவித்துள்ளார். இதற்கிடையே சிறையில் வைத்து இந்திராணி உள்ளிட்ட 3 பேரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஷீனாவை இந்திராணி கொலை செய்த விவரத்தை குடிபோதையில் போலீஸ் இன்பார்மரிடம் ராய் தான் உளறினார் என்பது குறிப்பிடத்தக்கது.